துபாய்: துபாயில் உள்ள ஆகப் பெரிய கடைத்தொகுதி, பிரசத்தி பெற்ற பர்க் காலிஃபா ஹோட்டல் ஆகியவற்றுக்கு அருகில் உள்ள கட்டுமானத் தளத்தில் நேற்று தீ மூண்டது. இந்தத் தீச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று துபாய் அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் நேரப்படி நேற்று காலை 10.30 மணிக்கு அந்தக் கட்டுமானத் தளத்தில் தீ மூண்டதாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். தீ மூண்ட இடத்தைச் சுற்றியுள்ள இடங்கள் போக்குவரத்துக்கு மூடப்பட்டன. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பாளர் கள் தீயை அணைத்தனர். தீச்சம்பவம் நிகழ்ந்த கட்டுமானத் தளத்தில் 60 மாடிகள் கொண்ட மூன்று குடியிருப்புக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தீச்சம்பவம் குறித்து துபாய் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ மூண்ட கட்டடத்திலிருந்து கிளம்பும் கரும்புகை. படம்: ஏஎஃப்பி