பொய்யான தகவல்களை மெய்போலக் கூறி னால், அதை நம்புவோர் பலர் இருக்கலாம். கடந்த ஆண்டில் அது பற்றியே அதிகம் பேசப் பட்டது. அதனால்தான் பல நாடுகளில் வதந்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் சிங்கப்பூரில் வதந்திகளுக்கு எதிராகவும் பொய்யான தகவல்களுக்கு எதி ராகவும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறிய நாட்டுத் தலைவர்கள், அவற்றைக் கட்டுப்படுத்தவும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆய்வுகளை நடத்தவும் பத்துப்பேர் கொண்ட ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளனர். நமது நாடாளுமன்றமும் அதற்கு இணக்கம் தெரிவித்துவிட்டது. நாடாளுமன்ற துணை நாயகர் சிறப்புக் குழுவின் தலைவராக நியமிக் கப்பட்டுள்ளார்.
பொய்ச் செய்திகள் குறித்து ஆராய்வதே அந்தக் குழுவின் முக்கிய பொறுப்பு. அந்தக் குழு, இணையத்தில் வெளிவரக்கூடிய தவறான தகவல்களை ஆராய்ந்து அதிலுள்ள பிழைகளைச் சுட்டிக் காட்டும். அதனால் ஏற் படக்கூடிய விளைவுகள் பற்றி விவரம் கொடுக்கும். மிக முக்கியமாக, அதற்கு எதிராக எடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கைகள் பற்றியும் அக்குழு தெரிவிக்க வேண்டும். குறிப்பாக அதைக் கட்டுப்படுத்த எடுக்கப் பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றிப் பரிந்துரைக்கவும் குழுவுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பொய்யான தகவல் வெளியாகும் போது அது குறித்து நிபுணர்களின் ஆலோ சனைகளும் நாடப்படும் என்று அக்குழுவின் தலைவர் திரு சார்ல்ஸ் சோங் அண்மையில் கூறினார்.
எத்தனையோ வெளிநாடுகளில் பொய்யான செய்திகளைப் பரப்பியதால், பல்வேறு பிரச்சி னைகள் ஏற்பட்டதோடு அல்லாமல் பல உயிரிழப்புகளும் ஏற்பட்ட கட்டங்களும் உண்டு.
இவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்கும் போது எல்லா நாடுகளிலும் உடனடியாக பொய்ப்பிரசாரம், வதந்தி பரப்பல் முதலிய போக்குகளை எதிர்கொண்டு அவை மேலும் சீர்கேடுகளை உருவாக்கிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம்முடைய தலையாய பொறுப்பாகின்றது.
சிங்கப்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொய்ச் செய்திகளுக்கு எதிரான ஆய்வுக்குழு அவற்றுக்குரிய நல்ல தீர்வுகளையும் கண்டாக வேண்டும். தவிர, நல்ல பரிந்துரைகளை முன்னுரைக்கவும் வேண்டும்.
அதே வேளையில், பேச்சு சுதந்திரம் பாதிப் படையாத வகையில் பார்த்துக்கொள்ள வேண் டும் என்பதும் இன்றியமையாதது.