இந்தியா தலைமையேற்றுள்ள ஜி20 மாநாடும் எதிர்பார்ப்புகளும்

உலகின் மிக முக்கியமான 20 நாடுகள் சேர்ந்து ஜி20 என்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் ஆண்டுதோறும்கூடி உலக அளவில் நிலவும் அரசியல், பொருளியல் பிரச்சினைகள் பற்றி பலவற்றையும் விவாதித்து இணக்கம் கண்டு கூட்டு அறிக்கை வெளியிட முயல்வது உண்டு.

ஜி20 அமைப்பு, ஆசிய நிதி நெருக்கடி ஏற்பட்ட பிறகு 1999ல் அமைக்கப்பட்டது.

சிங்கப்பூர், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியா உள்ளிட்ட உலகின் வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும் அங்கம் வகிக்கும் ஜி20 அமைப்பு, உலகின் 85% பொருளியல் உற்பத்திக்குப் பொறுப்பு வகிக்கிறது.

உலக அளவில் நடக்கும் வர்த்தகத்தில் 75%க்கும் அதிக வர்த்தகம் அந்த நாடுகளுக்கு இடையில்தான் நடக்கிறது. உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் அந்த நாடுகளில் வசிக்கிறார்கள்.

இயற்கை வளங்களைக் கட்டிக்காத்து அதோடு பொருளியல் வளர்ச்சியையும் சாதிப்பதே ஜி20 மாநாட்டின் முக்கியமான நோக்கம்.

ஒவ்வோர் ஆண்டும் இந்த அமைப்பின் நாடுகளில் ஒரு நாடு தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஜி20 தலைவர்களின் உச்சநிலைச் சந்திப்பிற்கான நிகழ்ச்சிநிரலை வகுப்பது வழமை.

அதன்படி இந்த ஆண்டின் உச்சநிலைச் சந்திப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது.

அதையொட்டி இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் உலகத் தலைவர்கள் கூடி இருக்கிறார்கள். செப்டம்பர் 9, 10 ஆம் தேதிகளில் அவர்கள் பலவற்றையும் பற்றி விவாதிக்கிறார்கள். தனித்தனி சந்திப்புகளையும் நடத்துகிறார்கள்.

ஜி20க்குத் தலைமை ஏற்றுள்ள இந்தியா, தனது நகர்களில் 200க்கும் மேற்பட்ட சந்திப்புகளை இதுவரை நடத்தி இருக்கிறது.

உணவு, எரிசக்திப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், வளரும் நாடுகளின் கடன் பிரச்சினை, உலகின் பலதரப்பு அமைப்புகளைச் சீரமைப்பது உள்ளிட்ட உலகம் எதிர்நோக்கும் அவசரமான பிரச்சினைகளில் மட்டுமன்றி, உலகப் பொருளியல் ஒத்துழைப்பு தொடர்பான இதர அம்சங்களிலும் ஒருமித்த கவனம் செலுத்தி இந்தியா அந்தக் கூட்டங்களை நடத்தி வந்துள்ளது.

‘உலகம் ஒரே குடும்பம்’ என்ற கருப்பொருளுடன் ஜி20 மாநாட்டை நடத்தும் இந்தியா, எல்லா நாடுகளையும் உள்ளடக்குகின்ற, எல்லா நாடுகளும் ஒத்துழைக்கின்ற ஒரு கோட்பாட்டை வலியுறுத்த விழைகிறது.

அதே நேரத்தில், ‘தென் உலகம்’ என்று ஒட்டுமொத்தமாகக் கருதப்படும் வளரும் நாடுகளின் ஒருமித்த குரலாகவும் தன்னை காட்டிக்கொள்ள இந்தியா முயல்கிறது.

ஜி20 நாடுகள் உச்சநிலைச் சந்திப்பை நடத்துகின்ற போதிலும் அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள பல நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் பல்வேறு பிரச்சினைகள் இன்னமும் தீர்வுகாணப்படாமல் நீடிக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.

சீனா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மட்டுமன்றி உச்சநிலைச் சந்திப்பை நடத்தும் இந்தியாவும் அத்தகைய பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது.

இந்தியா புதுடெல்லியில் நடத்துகின்ற உச்சநிலை மாநாட்டில் சீன அதிபர் ஸி ஜின்பிங் கலந்துகொள்ளவில்லை. இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

மாநாட்டில் கலந்துகொள்ளாமல் அதன் மூலம் உச்சநிலை மாநாட்டின் தலைமை நாடான இந்தியாவுக்குச் சங்கடத்தை ஏற்படுத்துவோம் என்றோ; மேற்கு நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் ஜி20 மாநாட்டின் முக்கியத்துவத்தைக் குறைப்போம் என்றோ; புதுடெல்லி மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று ஏற்கெனவே அறிவித்துவிட்ட ரஷ்ய அதிபருக்குத் தோள் கொடுப்போம் என்றோ சீன அதிபர் எதை வைத்து அந்த முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை.

புதுடெல்லி மாநாட்டில் சீன அதிபர் கலந்துகொண்டால் அமெரிக்க அதிபர் பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய தலைவர்களுடன் சீன அதிபர் சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைத்து இருக்கும்.

அமெரிக்கா, இந்தியா நாடுகளுடன் கூடிய சீனாவின் உறவு மேம்பட ஓரளவுக்கு உதவி கிடைத்து இருக்கும். இதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்துள்ள பிரச்சினை இந்தியாவின் பெங்களூரு நகரில் கடந்த பிப்ரவரியில் நடந்த ஜி20 கூட்டத்தில் கிளப்பப்பட்டது.

அதேபோல் புதுடெல்லி கூட்டத்திலும் அந்தப் பிரச்சினை எழுப்பப்படும். ரஷ்ய அதிபர் கலந்துகொள்ளவில்லை என்பதற்காக தலைவர்கள் இந்தப் பிரச்சினையை விட்டுவிடமாட்டார்கள்.

உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்த விவகாரத்தைப் பொறுத்தவரை இந்தியா இதுவரை ரஷ்யாவைக் கண்டிக்கவில்லை.

ஆகையால் இந்த விவகாரம் இந்தியாவுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும். இது அதற்கு ஒரு சவாலாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.

தனது தலைமைத்துவத்தின்கீழ் ஜி20 சந்திப்பில் ஏதாவது உலக சாதனையை நிகழ்த்திவிட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.

குறிப்பாக அது ‘தென் உலகத்தின்மீது’ கவனத்தைத் திருப்பி அந்த நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஒருமித்த கவனத்தைச் செலுத்துகிறது.

கடனடைப்பு ஏற்பாட்டைச் சீரமைப்பது, அனைத்துலக பண நிதியம், உலக வங்கி, உலக வர்த்தக நிறுவனம் ஆகியவற்றைச் சீரமைப்பது, பருவநிலை தொடர்பான நிதிவளம், உணவுப் பாதுகாப்பு, வருங்கால தொற்றுக்கு ஆயத்தம், ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்த இந்தியா மும்முரமாக செயல்பட்டு வந்துள்ளது.

இதில் இந்தியாவுக்கு சனிக்கிழமை முதல் வெற்றி கிடைத்தது. ஜி20 அமைப்பில் 55 நாடுகளைக் கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியத்தையும் இணைக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடி ஜூன் மாதம் யோசனை தெரிவித்து இருந்தார்.

அந்த யோசனை புதுடெல்லி மாநாட்டில் ஏற்கப்பட்டு ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியமும் இணைந்துவிட்டது.

இவற்றுக்கெல்லாம் செவிசாய்த்து போதிய நேரத்தை ஒதுக்கி ஜி20 அமைப்பின் இதர தலைவர்களும் இவற்றில் ஒருமித்த கவனத்தைச் செலுத்துவார்களே ஆனால் இந்தியா தலைமையில் நடக்கும் மாநாடு குறிப்பிடத்தக்க வெற்றியை ஓரளவுக்குப் பெற்றுவிடும் என்று நம்பலாம்.

இருந்தாலும் உலக அளவில் பிரச்சினைகளுக்கு முக்கியமான காரணங்களாக இருக்கின்ற புவிசார் அரசியல் பதற்றங்களைக் குறைக்க புதுடெல்லி மாநாடு எந்த அளவுக்கு உதவும் என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. இதற்கு மேலும் இமாலய முயற்சிகள் தேவை என்பதுதான் உண்மை எனத் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!