இளம் நாயகி ஸ்ரீபிரியங்காவுக்கு தமிழில் அதிக வாய்ப்பில்லை என்ற போதிலும், கிடைத்த கதாபாத்திரங்களில் தன் திறமையை வெளிப்படுத்தி மிளிர்கிறார். இவர் தமிழ் பேசத் தெரிந்த நாயகி என்று நன்கு தெரிந்திருந்தும் சில இயக்குநர்கள் ஒதுக்குகிறார்கள். அது தனக்கு வேதனையளிப்பதாகக் கூறுகிறார் பிரியங்கா. இந்நிலையில், இவரது நடிப்பை பாராட்டியுள்ளார்,
'சுந்தர பாண்டியன்' படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன். அண்மையில் நடைபெற்ற 'பிச்சுவாக் கத்தி' என்ற படத்தின் இசை வெளியீட்டில் கலந்துகொண்ட பிரபாகரன், அப்படத்தின் நாயகி ஸ்ரீபிரியங்காவின் நடிப்பை பலவிதமாகப் பாராட்டினார். "ஸ்ரீபிரியங்கா போன்று நிறைய தமிழ்ப் பெண்கள் நடிக்க வர வேண்டும். அவர்கள் பயப்படுவதுபோல் சினிமாவில் ஒழுக்க மீறல்கள் எல்லாம் கிடையாது. எல்லோரும் நண்பர்களாகத்தான் பழகுகிறார்கள், வேலை செய்கிறார்கள். "தமிழ்ப் பெண்ணான ஸ்ரீபிரியங்கா சினேகா, தன்ஷிகா போல பெரிய கதாநாயகியாக வளர வேண்டும்," என வாழ்த்தினார் பிரபாகரன்.