'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் முதல் பாகத்தை விட இப்படம் மிக சுவாரசியமாகவும் அற்புதமாகவும் இருக்கும் என்கிறார் கதா நாயகி அமலா பால். தனுஷுடன் இதுவரை நான்கு படங்களில் நடித்து முடித்துள்ளார் அம்மணி. இது போக, 'வட சென்னை' படத்திலும் தனு ஷுக்கு இவர்தான் ஜோடி. ஏற்கெனவே தனுஷ் தயாரிப்பில் 'அம்மா கணக்கு' படத்திலும் நடித்துள்ளார். "எங்கள் ஜோடி திரையில் கச்சிதமாக காட்சி அளிப்பதாக ரசிகர்கள் கருதுவதே நாங்கள் தொடர்ந்து ஜோடி சேர காரணம். 'வேலையில்லா பட்டதாரி'யின் முதல் பாகத்தில் ஷாலினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். "இரண்டாம் பாகத்தில் காதலி என்ற நிலையில் இருந்து மனைவியாக மாறியுள்ளது என் கதாபாத்திரம். எனவே இப்படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. "ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். இந்தப் படம் முதல் பாகத்தை விட ஸ்டைலாக, ரசிகர்களை மேலும் கவர்ந்திழுக்கக் கூடிய வகையில் இருக்கும்," என்கிறார் அமலா பால்.
'வேலையில்லா பட்டதாரி-2'ல் இந்தி நடிகை கஜோல் தொழிலதிபர் வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி மகள் சவுந்தர்யா படத்தை இயக்கி உள்ளார். தற்போது இப்படம் குறித்தும் இதில் நடித்தது குறித்தும், அமலா தன் அனுபவங்களை விவரிக்கும் சிறு காணொளிப் பதிவு ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் மேற்கண்ட தகவல்களை கூறியுள்ளார் அமலா. இதற்கிடையே அண்மைய பேட்டி ஒன்றில் மீண்டும் தனுஷை வெகுவாகப் பாராட்டி உள்ளார். நடிப்பு, இயக்கம், படத் தயாரிப்பு என்று அனைத்திலும் தனுஷ் தனி முத்திரையைப் பதித்து வெற்றி கண்டுள்ளதாகக் கூறியுள்ளார் அமலா பால். தற்போது மலையாளப் படங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறாராம். சம்பளம் குறைவு என்றாலும் நல்ல கதைகள் அமைவதா லேயே மலையாளப் படங்களில் நடிக்கும் ஆவல் அதிகரித்துள்ளதாக விளக்கம் தருகிறார். 'வேலையில்லா பட்டதாரி-2' வெற்றி பெற்றால் தமிழில் அமலா பாலின் சம்பளம் அதிகரிக்கக் கூடும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.