‘மூக்குத்தி அம்மன்’படத்தில் நடிப்பதற்காக விரதம் இருந்து வருகிறாராம் நயன்தாரா. இத்தகவலைப் அப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.
‘நானும் ரௌடிதான்’ படத்தில் நடித்தபோது நயன்தாரா தனக்கு நல்ல நண்பராகி விட்டதாகக் குறிப்பிடும் பாலாஜி, அண்மையில் நேரில் சந்தித்து அரை மணி நேரத்தில் நயன்தாராவிடம் ’மூக்குத்தி அம்மன்’ கதையை விவரித்தாராம்.
கதை பிடித்துப் போனதால உடனே அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் நயன்தாரா.
“தமிழில் அண்மைக் காலமாகத் தொடர்ந்து பேய்ப் படங்களாக வெளியாகின்றன. பக்திப் படங்கள் வெளிவந்து நீண்ட நாட்களாகிறது.
“நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன். அதனால் ஒரு பக்திப் படத்தை உருவாக்க வேண்டுமென முடிவு செய்தேன்.
“அதற்காக ‘மூக்குத்தி அம்மன்’ வெறும் பக்திப் படமாக மட்டும் இருக்காது. சமூகத்துக்குத் தேவையான ஒரு முக்கியமான செய்தியையும் சொல்லப் போகிறோம்,” என்கிறார் பாலாஜி.
பக்திப் படம் என்பதால் தாம் விரதம் இருந்து நடித்துக் கொடுப்பதாக நயன்தாராவே தெரிவித்தாராம்.
விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில படக்குழுவைச் சேர்ந்த பெரும்பாலானோர் இப்போதே பயபக்தியோடு அசைவ உணவுகளைத் தவிர்த்து சைவமாக மாறிவிட்டனராம்.
“கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள பவானி அம்மனின் இன்னொரு பெயர்தான் ‘மூக்குத்தி அம்மன்’. அதனால்தான் இந்தத் தலைப்பை வைத்தேன்,” என்கிறார் ஆர்.ஜே. பாலாஜி.