நடிகைகளின் வித்தியாசமான நடிப்பும் திறமையும் ஒருபக்கத்தில் பட வாய்ப்புகளைக் குவித்தாலும் மறுபக்கத்தில் காலாகாலத்தில் திருமணம் செய்து கொண்டு, குழந்தை குட்டிகளுடன் வாழ்க்கையில் செட்டிலாகவேண்டும் என்ற ஆசையும் அவர்கள் எண்ணத்தில் துளிர்த்துக்கொண்டேதான் இருக்கும்.
இப்படி விடாது துரத்தும் தனது திருமண ஆசையை இப்போது தள்ளிப்போட்டுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
பட வாய்ப்புகள் குவிவதன் காரணமாகவே திரு மணத்தை நிறுத்தி உள்ளதாக ராஷ்மிகா கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கில் வெளியான ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா தற்போது கார்த்தி ஜோடியாக ‘சுல்தான்’ படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கு, கன்னட மொழியிலும் முன்னணி நடிகையாக உள்ள இவருக்கும் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கும் திருமணம் நிச்சயமாகி ரத்தாகிவிட்டது.
இதுகுறித்து ராஷ்மிகா கூறுகையில், “கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான ரக்ஷித்துடன் எனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
“எனக்கு வரப்போகிற கணவர் சினிமாத் துறையில் இல்லாதவராக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் ரக்ஷித் வித்தி யாசமாக இருந்தார்.
“அவர்மீது எனக்கிருந்த காதலால் திருமணம் செய்துகொள்ள நாங்கள் முடிவு செய்தோம்.
“தொழில்ரீதியாக இருவரும் பெயரும் புகழும் பெறவேண்டும் எனில் திருமணத்துக்கு இரு ஆண்டுகள் காத்திருக்க நினைத்தோம்.
“ஆனால் இரு ஆண்டுகள் முடிந்தபிறகும் வாய்ப்புகள் அதிகமாக வந்து குவிவதால் திருமணத்துக்கு என்னால் நேரம் ஒதுக்கமுடியவில்லை.
“திருமணம் செய்தால் தயாரிப்பாளர்களைச் சிரமப்படுத்துவது போல் ஆகிவிடும். எனவே அவர்களுக்குத் தொல்லை கொடுக்கக்கூடாது என்பதால் திருமணத்தையே ரத்து செய்துவிட்டேன்,” என்று ராஷ்மிகா கூறியுள்ளார்.
இதற்கிடையே விருது விழா ஒன்றில் இவர் கலந்துகொண்ட போது தமிழ் சினிமாவில் யாரை காதலிக்க ஆசைப்படுகிறீர்கள், யாரைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவீர்கள் என கேட்டுள்ளனர்.
அதற்கு விஜய் சேதுபதியைக் காதலிக்க வேண்டும் எனவும் விஜய்யைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனவும் ராஷ்மிகா பதிலளித்துள்ளார்.
அத்துடன் நட்பு என்றால் விஜய் தேவரகொண்டா தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி நடித்துள்ள ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’ படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியீடாக உள்ளது.
இந்நிலையில் ரக்ஷித் அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்தார். அப்பொழுது அவரிடம் ராஷ்மிகா பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவரோ, “ராஷ்மிகா பெரிய கனவுகள் காண்பவர். அவரின் கடந்த காலம் பற்றி எனக்குத் தெரியும். அதனால் அந்த கனவுகள் எங்கிருந்து வருகிறது என்பதும் தெரியும். அவரின் கனவுகள் எல்லாம் நனவாகட்டும்,” என்றார்.
ராஷ்மிகாவுக்கும் தெலுங்கு நடிகர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கத்தால்தான் திருமணத்தை ராஷ்மிகா நிறுத்திவிட்டார் என்றும் படவாய்ப்புகள் குவிவதால்தான் திருமணத்தை நிறுத்தியுள்ளதாக ராஷ்மிகா கூறுவது பொய் என்றும் கன்னட ரசிகர்கள் பலரும் விளாசி வருகிறார்கள்.
ராஷ்மிகாவை ரசிகர்கள் விளாசுவதைப் பார்த்த ரக்ஷித், யாரும் ரஷ்மிகாவை குறைசொல்ல வேண்டாம் என்று அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். ரக்ஷித் கூறியதை பார்த்த ரசிகர்களோ, இவ்வளவு நல்ல மனிதரை விட்டுவிட்டுச் செல்ல உங்களுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ என்று மீண்டும் கூடுதலாகத் திட்டி வருகின்றனர்.
‘கிரிக் பார்ட்டி’ கன்னட படத்தில் நடித்தபோது ராஷ்மிகா - ரக்ஷித் ஷெட்டி இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.