என்னால் மீண்டும் எழுந்து நடமாடவே முடியாது எனும் அச்சத்தில் இருந்து மீண்டு வந்துள்ளேன் என்கிறார் நடிகை மஞ்சிமா மோகன். அந்தளவுக்கு விபத்தொன்றில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளார்.
காலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக படுத்த படுக்கையாகி விட்டாராம். எப்படியோ இந்த இக்கட்டில் இருந்து மீண்டு வந்துவிட்டதாக சொல்பவர், தற்போது விஷ்ணு விஷாலுடன் ‘எஃப்.ஐ.ஆர்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அந்த விபத்து குறித்தும், தான் கடந்து வந்த வேதனை குறித்தும் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மஞ்சிமா.
“மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை அறவே இல்லை. எந்நேரமும் ஒருவித அச்சம் என்னை ஆட்கொண்டிருந்தது.
“நண்பர்களும் குடும்பத்தாரும் நம்பிக்கை ஊட்டியபோதிலும் மனம் எதையும் ஏற்கவில்லை,” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ‘எஃப்.ஐ.ஆர்’ இயக்குநர் மனு தான் இவருக்குப் பெரும் நம்பிக்கையூட்டினாராம்.
தன் மனதில் தன்னம்பிக்கையை விதைத்து காயத்திலிருந்து மீண்டுவர உதவிய மனுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மஞ்சிமா.
“எனக்கு அடிபட்டதும், அதனால் வீட்டில் முடங்கியதும் பலருக்குத் தெரிந்திருக்கும். என்னைப் போலவே பல நடிகர்கள் இத்தகைய அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள். அனைவருமே மனோதிடத்துடன் செயல்பட்டு மீண்டு வந்திருக்கிறார்கள்.
“அத்தகைய அனுபவங்களை முன்பு பத்திரிகையில் படித்தபோது சாதாரணமாக எடுத்துக் கொண்டேன். அனைவருமே சுலபமாக மீண்டு வந்ததாகக் கருதினேன். ஆனால் தனிப்பட்ட வகையில் எனக்கும் அப்படியொரு நிலைமை வந்தபோதுதான் பல விஷயங்கள் புரிந்தது.
“ஒரு விபத்து, காயத்திலிருந்து மீண்டு வருவது சுலபமல்ல. அதற்குப் பல விஷயங்கள் தேவைப்படுகின்றன. இந்தத் தருணத்தில் மோசமான சூழ்நிலையில் இருந்து தைரியத்தின் துணையோடு மீண்டு வந்தவர்களை வணங்குகிறேன்,” என்று தெரிவித்துள்ளார் மஞ்சிமா மோகன்.
விபத்தில் சிக்கிய பிறகு மீண்டும் நடக்க முடியுமா, திரைப்படங்களில் பணியாற்ற முடியுமா? என்று பலவிதமான சந்தேகங்கள் தன் மனத்தில் தோன்றியதாக குறிப்பிட்டுள்ள அவர், எதிர்காலத்தில் நடனமாட முடியாமல் போய்விடுமோ என்றும் பயந்தாராம்.
சுற்றி இருப்பவர்கள் நம்பிக்கை ஊட்டினாலும் மீண்டும் தம்மால் நடனமாட முடியாது என்று இவராகவே தீர்மானித்து விட்டாராம்.
“நடனத்தை உயிருக்கு இணையாக நேசிக்கிறேன் என்பது என் ரசிகர்களுக்குத் தெரியும். நடனமாட முடியாத வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இப்படி ஒரு மனப்போராட்டத்தில் சிக்கித் தவித்த வேளையில்தான் இயக்குநர் மனு தொடர்பு கொண்டு பேசினார்.
“’உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் மீண்டு வருவீர்கள். நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவது குறித்து திட்டமிடலாம்’ என்றார் அவர். அவரது வார்த்தைகளில் அவருக்கு இருந்த நம்பிக்கை எனக்கும் ஏற்பட்டது,” என்கிறார் மஞ்சிமா.
அதன்பிறகு குணமடைந்த பின்னால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிக்க ஆரம்பித்தாராம். மேலும் ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தில் எவ்வாறு நடிக்க வேண்டும் என்பது குறித்தும் அதிகம் யோசித்தாராம்.
இந்த நேர்மறைச் சிந்தனை தன்னை விரைவில் குணமடைய வைத்தது என்று குறிப்பிடுபவர், இயக்குநர் மனுவின் வார்த்தைகளை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது என்கிறார். தற்போது முழுமையாக குணமடைந்துள்ள மஞ்சிமா ‘எஃப்.ஐ.ஆர்’ படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.
“இந்தப் படத்தின் மூலம் திரையுலகில் மறுபிரவேசம் செய்வது போல் உள்ளது. என்னைப் பொறுத்தவரை புதுப்பிறவி எடுத்திருப்பதாகக் கருதுகிறேன். சமூக வலைத்தளங்களில் எனது பதிவைக் கண்ட சக கலைஞர்கள் தொடர்பு கொண்டு பேசினர். தன்னம்பிக்கையூட்டும் அழகான வார்த்தைகளை நான் பயன்படுத்தி இருப்பதாகப் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
“இத்தகைய பாராட்டுகளுக்காகவோ, எனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தவோ அந்தப் பதிவை வெளியிடவில்லை.
“என்னைப் போல் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டெழ வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்கிறார் மஞ்சிமா.