இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருப்பது தமிழ்த் திரையுலகத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் எனப் பலரும் அவரைப் பாராட்டியும் இந்தியக் கிரிக்கெட்டுக்கு அவரது பங்களிப்பை மெச்சியும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
டோனி பலருக்கு முன்மாதிரியாக, வழிகாட்டியாகத் திகழ்ந்தார் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் தனது அபாரமான ஆட்டத்தால் கிரிக்கெட் ரசிகர்களை டோனி மகிழ்வித்தார் என்றும் கூறியுள்ளார்.
“நீங்கள் (டோனி) எப்போதுமே அபாரமான தலைவராக இருந்துள்ளீர்கள். ஓய்வுக்குப் பிறகும் வேறு வகையில் எங்களை வியப்பில் ஆழ்த்துவீர்கள் என உறுதியாக நம்புகிறேன். உங்களது பங்களிப்புக்கு எங்களுடைய நன்றி,” என்று சிவா தெரிவித்துள்ளார்.
அவரது இந்தப் பதிவைக் கண்ட இயக்குநர் சீனு. ராமசாமி டோனியைப் போலவே சிவாவும் பலருக்கு முன்மாதிரியாக இருப்பதாகப் பாராட்டியுள்ளார்.
“டோனியைப் போலவே உங்களது சொந்த களத்தில் ரசிகர்களைப் பல வகையிலும் மகிழ்விக்கிறீர்கள். மேலும் புதுமுகங்களுக்கும் நண்பர்களுக்கும் வாய்ப்புகளை வழங்குகிறீர்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார் சீனு. ராமசாமி.
இந்தப் பதிவால் நெகிழ்ந்துபோன சிவகார்த்திகேயன் இத்தகைய வார்த்தைகள் தம்மை மேலும் ஊக்கப்படுத்துவதாகக் கூறியுள்ளார். சீனு ராமசாமியின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மற்றொரு டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“உங்களுடைய வாழ்த்தால் மேலும் உழைக்க வேண்டும் என்று தோன்றுகிறது. தற்போது உள்ளதைவிட மேலும் நல்ல நடிகனாக, மனிதனாக என்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்,” என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனும் டோனியின் பங்களிப்பைப் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தன்னம்பிக்கை என்பது விளையாட்டுத் துறையிலும் வாழ்க்கையிலும் எந்த அளவுக்கு சாதிக்க உதவும் என்பதை செயல்முறையில் டோனி விளக்கிக் காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“சிறிய நகரத்தில் பிறந்து இந்தியாவின் கதாநாயகனாக உருவெடுத்துள்ளீர்கள். இக்கட்டான நேரங்களில் நீங்கள் திட்டமிட்டு மேற்கொண்ட முயற்சிகள், அமைதியாக நடந்து கொண்டவிதம் ஆகியவற்றை இழந்துவிட்டதாக இந்திய அணி, நிச்சயம் உணரும். சென்னையுடனான உங்களது காதல் கதை நீடிப்பதை அறிந்து மகிழ்கிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஓய்வுக்குப் பின் டோனி சொந்த நிறுவனம் தொடங்கி தொழிலதிபராக வலம் வரப் போவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.