நான் விரும்பும் ஒரு விஷயம் கைகூடி வரவில்லை என்றால் கன்னத்தில் கைவைத்துக் கவலைப்படமாட்டேன் என்கிறார் நடிகை தமன்னா.
எதிலும் இறுதிவரை போராடுவதும் விடாமுயற்சியுடன் செயல்படுவதும்தான் தமது பலம் என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா கிருமித்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள தமன்னாவுக்கு திரையுலகில் இது 15வது ஆண்டாகும். மும்பை நாயகிகளில் நன்றாகத் தமிழ் பேசுபவர்கள் பட்டியலில் இவருக்கும் நிச்சயம் இடமுண்டு.
‘குயின்’ இந்திப் படத்தின் தெலுங்கு மறுபதிப்பான ‘தட் மகாலட்சுமி’ படத்தில் இவர்தான் நாயகி. அது வெளியீடு காண தயாராக உள்ள நிலையில், கோபி சந்துடன் ‘சீட்டிமார்’, இந்தியில் நவாசுதீன் சித்திக்குடன் ‘போல் சுடியான்’ என தமன்னா நடிப்பில் பல படங்கள் வெளியீடு காணத் தயாராகி வருகின்றன. இந்நிலையில் தமிழில் இணையத் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
“நடிக்கத் தொடங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்டதை நினைக்கும்போது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. இத்தனை ஆண்டுகளாக வேலையில் மட்டுமே மூழ்கி இருந்துள்ளேன். அதுகுறித்து மட்டுமே சிந்தித்ததால் மற்ற விஷயங்களில் கவனம் சிதறியதில்லை.
“இருப்பினும் விமானத்தில் பறந்து பறந்து இடைவிடாமல் நடித்ததில் மகிழ்ச்சிதான். படப்பிடிப்புகளுக்கு மத்தியில் எனது வீட்டிற்கு ஒரு விருந்தாளியைப் போல் வந்து சென்றிருப்பதாக இப்போது நினைக்கத் தோன்றுகிறது. கொரோனா ஊரடங்கு பலவற்றை வெளிப் படுத்தி, நம்மை உணரச் செய்திருக்கிறது,” என்கிறார் தமன்னா.
இவருக்கு வீட்டிலும் நண்பர்கள் மத்தியிலும் சில செல்லப் பெயர்கள் உள்ளன. தம்மு, டின்ட்லி, டிமன்ட் ஆகியவை அவற்றுள் சில. பள்ளியில் படித்தபோது வீட்டில் தம்மு என்று அழைத்தார்களாம். டின்ட்லி, டிமென்ட் ஆகிய இரண்டும் தமன்னாவின் தந்தை தன் மகளுக்கு வைத்த செல்லப் பெயர்கள்.
வளர்ந்த பிறகு டேமி, டேம்ஸ் என்று நண்பர்கள் அழைக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் என்ன அர்த்தம் என்பது தமக்கோ அவ்வாறு அழைப்பவர்களுக்கோ தெரியாது என்கிறார் தமன்னா. எனினும் ‘தம்மு’ என்ற பெயர்தான் இவருக்குப் பிடித்தமானது.
“யாராவது என்னை ‘தம்மு’ என்று அழைத்தால் உடனே என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றுவிடும். பள்ளிக்கூட நாட்கள் நினைவுக்கு வரும். ஒரு வகையில் புத்துணர்ச்சியாக உணர்வேன். இந்த ஊரடங்கின்போது பழைய சம்பவங்களை எல்லாம் நினைத்துப் பார்த்தபோது வாழ்க்கை எந்தளவு மாறிவிட்டது என்று சிலிர்த்துப்போனேன்,” என்கிறார் தமன்னா.
ஓய்வும் விடுமுறையும் கிடைத்தால் வெளியே சுற்றித் திரிவதில் இவருக்கு ஆர்வமில்லையாம். மாறாக வீட்டில் நன்கு தூங்குவதற்குதான் விரும்புவாராம்.
மேலும், இணையத் தளங்களில் பழைய நடிகர், நடிகைகளின் பேட்டிகள் மற்றும் அவர்களைப் பற்றிய நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிப்பதும் தமன்னாவின் முக்கியப் பொழுதுபோக்குகளில் ஒன்று. இது தவிர ஹாலிவுட் திரைப்படங்கள், சினிமா சம்பந்தப்பட்ட, திரைக்குப் பின்னால் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பையும் பார்த்து ரசிப்பதில் இவருக்கு விருப்பம் உள்ளது.
“எதையும் ஒளிவுமறைவு இன்றி பேசுவதுதான் எனது பலவீனம் என்று நினைக்கிறேன். எதுவாக இருந்தாலும் பட்டென்று பேசிவிடுவேன். அதேசமயம் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதுதான் எனது பலம். விடாமுயற்சி எனது உடன்பிறந்த குணமாக அமைந்துவிட்டது. அதனால்தான் கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டபோது கூட நான் பயந்துவிடவில்லை.
“பயம்தான் நமது முதல் எதிரி. அதை எதிர்கொள்ளும் வரை எல்லாமே பூதாகரமாகத் தெரியும். ஆனால், நேருக்கு நேர் சந்தித்த பிறகு இதற்காகவா பயந்தோம்? என்று நினைக்கத் தோன்றும். கொரோனாவுக்குப் பிறகு சில விஷயங்கள் குறித்து நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது. எதற்காகவும் அச்சப்படத் தேவையில்லை என்பதை கொரோனா கிருமித்தொற்று உணர்த்தி உள்ளது,” என்று குறிப்பிடும் தமன்னா, தாம் முன்பைவிட தைரியமான பெண்ணாக வலம் வருவதாகச் சொல்கிறார்.
ஊரடங்கின்போது வீட்டைச் சுத்தப்படுத்துவது, சமையல் செய்வது என இவரும் சக நடிகைகளைப் போல் நேரத்தைச் செலவிட்டுள்ளார். அனைத்தையும்விட தன் தாயாருடன் அதிக நேரத்தைச் செலவிட்டதில் கூடுதல் மகிழ்ச்சியை உணர்ந்தாராம்.