இரண்டு நாள்களில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக உருவாகிறது 'கண்ணை நம்பாதே'. மு. மாறன் இயக்குகிறார். உதயநிதியும் ஆத்மிகாவும் இப்படத்துக்காக இணைந்துள்ளனர்.
'ரோஜாகூட்டம்' ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பிரசன்னா, பூமிகா, வசுந்தரா, கு.ஞானசம்பந்தன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
திகில், காதல் என்று பல அம்சங்களுடன் தயாராகிறது இப்படம். மு. மாறன் இதற்கு முன்பு 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படம் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்.
"எனது முதல் படம் வெளியானதுமே நண்பர்கள் பலரும் 'அருள்நிதி படத்தை முடித்துவிட்டீர்கள். அடுத்து உதயநிதி படமா' என்று விளையாட்டாக கேட்டனர். உண்மையில் அப்படி எந்தவொரு திட்டமும் என்னிடத்தில் இல்லை.
"முதல் படம் குற்றப் பின்னணி கொண்ட திகில் படமாக உருவானது. எனவே அடுத்து ஒரு காதல் படத்தை இயக்கவேண்டும் என்று விரும்பினேன். அப்படி ஒரு கதை அமைந்தது.
"அந்த நேரம் பார்த்து உதயநிதி சாருக்கும் அது பொருத்தமாக அமைய அவரிடம் கதை சொன்னேன். அவரோ என்னுடைய முதல் படத்தைப் பார்த்ததாகவும் அது பிடித்துப்போனதால் அதேபோன்ற ஒரு குற்றப் பின்னணி கொண்ட திகில் கதையில் நடிக்க விரும்புவதாகவும் சொன்னார்," என்கிறார் மு. மாறன்.
இதையடுத்து தனது குழுவுடன் அமர்ந்து மற்றொரு கதையைத் தயார் செய்தாராம். உதயநிதி அதற்கு பச்சைக்கொடி காட்ட, அதே வேகத்தோடு படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். இன்னும் இருபது விழுக்காடு பணிகள் மட்டுமே மீதம் உள்ளனவாம்.
"கதைக்குப் பொருத்தமாக 'கண்ணை நம்பாதே' என்று தலைப்பு வைத்திருக்கிறோம். இரண்டு நாள்களில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக இருக்கும்.
"எந்தவொரு திகில் கதையிலும் சில குற்றங்கள் நடக்கும். முக்கியமான ஒரு முடிச்சு வைத்திருப்பார்கள். அந்த முடிச்சை மையமாக வைத்தே சில சம்பவங்களை, குற்றங்களைக் காட்சிப்படுத்தி இருப்பார்கள். இந்தப் படத்தில் யாருமே எதிர்பார்க்காத ஒரு முடிச்சு இருக்கும். நான் தொட்டிருக்கும் விஷயம் படம் பார்ப்பவர்கள் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கும்," என்கிறார் மாறன்.
சாம்.சி இப்படத்துக்கு இசை அமைக்கிறார். 'பரியேறும் பெருமாள்' ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். முழுப் படத்தையும் சென்னையில்தான் படமாக்கி உள்ளனர். 35 நாட்களில் 80 விழுக்காடு படத்தை முடித்துவிட்டனராம். மேலும் பத்து நாட்கள் படப்பிடிப்பை நடத்தினால் மொத்த படமும் தயாராகிவிடும்.
"அருள்நிதி, உதயநிதி ஆகிய இருவரிடமும் மிகுந்த திறமை உள்ளது. இருவருடனும் இனிமையான தருணங்கள் உள்ளன. 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் முதல் பிரதி தயாரானதும் அருள்நிதி படத்தைப் பார்த்தார்.
"படம் முடிந்ததும் எதுவும் சொல்லாமல் கிளம்பிச் சென்றுவிட்டார். உண்மையாகவே நான் பயந்துவிட்டேன். அவருக்குப் படம் பிடிக்கவில்லையோ என்று நினைத்து குழம்பி நின்றேன். ஆனால் இரவு அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
"மகிழ்ச்சியான குரலில், 'படம் நான் எதிர்பார்த்தது போன்றே நன்றாக வந்திருக்கிறது. என்னிடம் சொன்னது போலவே படத்தை எடுத்திருக்கிறீர்கள். நாளை காலை சந்திப்போம்' என்றார்.
"மறுநாள் சந்தித்தபோது ஒரு லட்சம் ரூபாயைக் கையில் கொடுத்து எனக்குப் பிடித்தமான இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறினார்.
"உதயநிதி சாரைப் பொறுத்தவரை மிகவும் அன்பானவர். மனிதநேயம் மிக்கவர்; பிறர் நலனிலும் அக்கறை கொண்டவர். உதாரணத் திற்கு ஒரு சம்பவம்.
இந்தப் படத்தில் மழையோடு சம்பந்தப்பட்ட சில காட்சிகள் உள்ளன. நாங்கள் படப்பிடிப்பை நடத்தியபோது சென்னையில் கோடைக் காலம். அங்கு தண்ணீர் கஷ்டமும் அதிகம்.
"இந்நிலையில் உதய் சார் என்னை அழைத்தார். 'மழைக்காட்சிகள் எடுப்பதாக சொல்லியிருந்தீர்கள். சென்னையில் ஏற்கெனவே தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. நாமும் இப்படி தண்ணீரை வீணடித்தால் அது சரியல்ல. ஒரு குடம் தண்ணீருக்கு மக்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். எனவே மழை சம்பந்தப்பட்ட காட்சிகளை மாற்றி அமையுங்கள்' என்றார். "அவர் சொன்ன விஷயமும் அந்தப் பண்பும் எனக்குப் பிடித்திருந்தது. எனவே, அவசியமற்ற இடங்களில் மழையைத் தவிர்த்தேன்," என்கிறார் மாறன்.