தமிழ் சினிமாவையும் சர்ச்சைகளையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. கோடம்பாக்கத்தில் அண்மைய சர்ச்சைக்கு காரணமாகி உள்ளார் சூர்யா.
அண்மையில் 'சூப்பர் ஸ்டார்' என்ற அடைமொழியுடன் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு செய்திக்குறிப்புதான் பிரச்சினைக்கு வித்திட்டுள்ளது.
சூர்யா நடித்து வரும் புதிய படம் 'ஜெய் பீம்'. இப்படக்குழுவினர் 'ஜெய் பீம்' குறித்த சில தகவல்களுடன் அந்த செய்திக்குறிப்பை அனுப்பி இருந்தனர். அதில்தான், 'சூப்பர் ஸ்டார்' சூர்யா என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, செய்தியாளர்கள் மத்தியில் இந்த விஷயம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இது குறித்து 'தமிழ் முரசு' தொடர்பு கொண்டபோது பேசிய மூத்த செய்தியாளர் ஆர்.எஸ்.அந்தணன், சூர்யாவின் இந்த செயல்பாட்டை ஏற்க முடியாது என்றார்.
"ரஜினிகாந்த் இன்னும் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரது படங்களுக்கு இன்றளவும் வரவேற்பு உள்ளது. நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு அவரது படங்கள் வியாபாரம் ஆகின்றன. வசூலும் சிறப்பாக உள்ளது.
"ஒருவேளை சினிமாவை விட்டு விலகுவதாக ரஜினி அறிவித்தால், அதன்பிறகு யார் 'சூப்பர் ஸ்டார்' என்று போட்டி வைக்கலாம். அதற்கு முன்பு சூர்யா 'சூப்பர் ஸ்டார்' பட்டத்தை தனக்குத்தானே சூட்டிக்கொள்வது நியாயம் அல்ல," என்கிறார் ஆர்.எஸ்.அந்தணன்.
ரஜினியின் தீவிர ரசிகரான சோளிங்கர் ரவி என்பவர் பல ஆண்டுகளாக ரஜினி படங்கள் வெளியாகும்போது, தன் சொந்த செலவில் பதாகை வைப்பது, சுவரொட்டி அச்சடித்து வெளியிடுவது என்று படத்தை விளம்பரப்படுத்துவது வழக்கம்.
அந்த வகையில், 'அண்ணாத்த' படத்துக்காகவும் பல லட்சம் ரூபாய் செலவில் விளம்பர ஏற்பாடுகளைச் செய்கிறாராம்.
"ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றதும், அவருக்காக செலவு செய்தவர்கள் இனி காணாமல் போய்விடுவார்கள் என்றெல்லாம் பேசினார்கள்.
ஆனால், சோளிங்கர் ரவி போன்ற அதிதீவிர ரசிகர்கள் இன்றளவும் ரஜினிக்காக பெருந்தொகையைச் செலவிட தயாராக உள்ளனர்.
"சூர்யாவுக்குத் தெரியாமல் இவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என்ற வாதத்தை ஏற்க இயலாது. காரணம், 'ஜெய் பீம்' படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான்.
"எனவே, அவருக்குத் தெரியாமல் எந்தவோர் அறிவிப்பையும் வெளியிடமாட்டார்கள்," என்கிறார் ஆர்.எஸ்.அந்தணன்.
இது தொடர்பாக சூர்யா ஏதேனும் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷுக்குப் பட்டம் சூட்டும் செல்வா
இதற்கிடையே, தன் தம்பி தனுஷை வைத்து படம் இயக்கி வரும் இயக்குநர் செல்வ ராகவன் தனுஷுக்கு புதிதாக பட்டம் கொடுக்க தீர்மானித்துள்ளாராம்.
புதுப்படத்தின் தலைப்புக் காட்சியில் இந்தப் பட்டம் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு. அவர் ஏற்கெனவே சில நடிகர்களுக்குப் பட்டம் கொடுத்தவர். ஏற்கெனவே இவரது தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ளார்.
எனவே, செல்வராகவன் தேர்வு செய்துள்ள பட்டப்பெயரை தாணுவை வைத்து அறிவிக்கப் போகிறார்களாம்.
தனுஷ் இதுவரை எந்தவிதப் பட்டமும் சூட்டிக்கொண்டதில்லை. தமக்கு அதில் ஆர்வம் இல்லை என்று நெருக்கமானவர்களிடம் சொல்கிறாராம்.
பட்டத்தை ஏற்க மறுத்த யோகிபாபு
அண்மையில், நடிகர் யோகிபாபுவை நாயகனாக வைத்து படம் தயாரிக்க உள்ள ஒரு தரப்பினர், அவருக்கு 'காமெடி சூப்பர் ஸ்டார்' என்று பட்டம் கொடுக்க விரும்புவதாகக் கூறியுள்ளனர்.
ஏற்கெனவே சந்தானத்துக்கும் இதே பட்டத்தை கொடுக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியானது.
அது குறித்து ரஜினியிடம் கேட்டபோது, "தாராளமாக கொடுக்கட்டுமே... 'சூப்பர் ஸ்டார்' பட்டம் எனக்கு சொந்தமானது அல்ல" என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டார்.
இந்நிலையில், தனக்கு எந்த பட்டமும் வேண்டாம் என்று கூறிவிட்டாராம் யோகிபாபு.
ஆனால், ரஜினி ரசிகர்கள் இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை.
சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக பதிவிட்டு 'சூப்பர் ஸ்டார்' என்றால் அது ரஜினிதான் என்று முழங்கப் போகிறார்களாம்.