தமிழ் மக்கள் இல்லை என்றால் நான் இல்லை என்று நடிகர் ரஜினி உருக்கத்துடன் கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற தேசிய திரைப்பட விழாவில், அவருக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்பட்டது.
இது இந்தியத் திரையுலகில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். விருது விழாவில் பேசிய ரஜினி, தம்மை திரைப்பட நடிகராக உருவாக்கிய காலஞ்சென்ற இயக்குநர் பாலச்சந்தருக்கு விருதை அர்ப்பணிப்பதாகக் குறிப்பிட்டார்.
"என்னுடன் பணிபுரிந்த ஓட்டுநர் ராஜ்பகதூர்தான் எனது நடிப்புத் திறனைக் கண்டறிந்து ஊக்குவித்தார். என்னை இந்தத் துறைக்கு கொண்டு வந்த அவருக்கு நன்றி.
"அனைத்தையும் கடந்து என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி. தமிழ் மக்கள் இல்லை என்றால் நான் இல்லை," என்றார் ரஜினி.
விருது பெற்ற அவருக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தேசிய திரைப்பட விழாவில் பங்கேற்ற துணை அதிபர் வெங்கையா நாயுடு அனைத்து கலைஞர்களுக்கும் தன் கையால் விருதுகளை வழங்கினார்.
2019ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்ப்படமாக வெற்றிமாறன் இயக்கிய 'அசுரன்' விருது பெற்றது.
நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய், தனுஷ் ஆகிய இருவரும் முறையே இந்தி திரைப்படம் 'போன்ஸ்லே', தமிழ் திரைப்படமான 'அசுரன்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றனர்.
சிறந்த நடிகைக்கான விருது கங்கனா ரணாவத்துக்கு வழங்கப்பட்டது. 'மணிகர்னிகா: ஜான்சி ராணி', 'பங்கா' படங்களில் அவர் சிறப்பாக நடித்திருந்தார்.
'விஸ்வாசம்' படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது டி.இமானுக்கு வழங்கப்பட்டது.
பார்த்திபன் இயக்கி நடித்த 'ஒத்த செருப்பு அளவு 7' படத்திற்கு நடுவர்களின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. இதே படத்துக்காக ரசூல் பூக்குட்டி சிறந்த ஒலிக்கலவைக்கான விருதைப் பெற்றார். நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது வழங்கப்பட்டது.