பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு உலகம் எங்கும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
அவரது ரசிகர் ஒருவர் அண்மையில் ஓர் இந்தியருக்கு கைகொடுத்துள்ளார்.
அஷ்விணி தேஷ்பாண்டே என்ற கல்லூரி பேராசிரியர் எகிப்தில் உள்ள பயண முகவருக்கு முன்பணம் அனுப்ப வேண்டியிருந்தது.
ஆனால் வங்கிப் பிரச்சினையால் பணத்தை அனுப்புவதில் அவருக்குச் சிரமம் இருந்தது.
என்ன செய்வது என்று தெரியவில்லை.
பயண முகவர் அடுத்த செய்ததை அஷ்விணி எதிர்பார்க்கவில்லை.
"நீங்கள் ஷாருக் கானின் நாட்டைச் சேர்ந்தவர்தானே. நான் உங்களை நம்புகிறேன்," என்று கூறியிருக்கிறார் அந்த பயண முகவர்.
அது மட்டுமல்ல, தாமே பணம் போட்டு அஷ்விணியின் பயணத்தை முன்பதிவு செய்ய அவர் முன்வந்தார்.
"நீங்கள் வேறு எந்த நாட்டவராகவும் இருந்திருந்தால் நான் இவ்வாறு செய்திருக்க மாட்டேன். ஆனால் ஷாருக் கானுக்காக எதையும் செய்வேன். நான் ஷாருக்கின் தீவிர ரசிகன்," என்று கூறியுள்ளார்.
சொன்னபடி தாமே பணம் போட்டு அஷ்விணியின் பயணத்தை முன்பதிவு செய்தார் அந்த எகிப்திய பயண முகவர்.
அந்தச் சம்பவத்தை டுவிட்டர் சமூக ஊடகத்தளத்தில் சில நாள்களுக்கு முன்னர் பகிர்ந்தார் அசோகா பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறை பேராசிரியரான அஷ்விணி.
அவர் அதைப் பகிர்ந்ததும், வேறு பலரும் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
வெளிநாடுகளில் மற்றவர்களுடன் நட்புகொள்ள ஷாருக் கான் தங்களுக்குப் பாலமாய் அமைந்ததாகப் பலரும் கூறினார்.