புதுடெல்லி: கடைசி பந்தில் ஐந்து ஓட்டங்களை அடித்தால் வெற்றி, நான்கு அடித்தால் போட்டி சம
நிலையாகி 'சூப்பர் ஓவருக்கு' செல்லும்.
இத்தகைய பரபரப்பான சூழலில், கால் திசையில் வந்த பந்தை உயரே தூக்கி அடித்து, ஆறு ஓட்டங்களைப் பெற்றுத் தந்தார் தமிழக வீரர் ஷாருக் கான்.
இதனையடுத்து, இறுதிப் போட்டி யில் கர்நாடகாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக சையது முஸ்டாக் அலி டி20 கிண்ணத்தைத் கைப்பற்றியது
தமிழ்நாடு கிரிக்கெட் அணி.
ஒட்டுமொத்தத்தில், ஆக அதிகமாக தமிழக அணி மூன்று முறை அக்கிண்ணத்தை வென்றுள்ளது.
நேற்று நடந்த இறுதிப் போட்டியில் பூவா தலையாவில் வென்ற தமிழக அணியின் தலைவர் விஜய் சங்கர், முதலில் தமது அணி
பந்துவீசும் என அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மணீஷ் பாண்டே தலைமையிலான கர்நாடக அணி முதலில் பந்தடித்தது. சாய் கிஷோர், சஞ்சய் யாதவின் சுழற்பந்து வீச்சில் திணறிய அவ்வணி, 32 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
ஆனாலும், அபினவ் மனோகர் (46), பிரவீண் துபே (33) கைகொடுக்க, கர்நாடக அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களை எடுத்தது.
இலக்கை விரட்டிய தமிழக அணிக்கு அதிரடித் தொடக்கம் கொடுத்தார் ஹரி நிஷாந்த். 12 பந்துகளில் 23 ஓட்டங்களை
விளாசிய துரதிர்ஷ்டவசமாக 'ரன் அவுட்' முறையில் ஆட்டமிழந்தார்.
அதிரடி ஆட்டக்காரர் ஷாருக்கான் இருந்ததால் தமிழக வீரர்கள் நம்பிக்கை இழக்கவில்லை.
அந்த நம்பிக்கையை அவரும் காப்பாற்றினார்.
கடைசி ஓவரில் 16 ஓட்டங்களை எடுத்து, தமிழக அணி வெற்றியைச் சுவைத்தது.
15 பந்துகளில் ஒரு பவுண்டரி, மூன்று சிக்சருடன் 33 ஓட்டங்களை விளாசினார் ஷாருக். எதிர்
பார்த்ததுபோல, அவருக்கே ஆட்ட நாயகன் விருதும் கிடைத்தது.