'ஹே! சினாமிகா' படம் மூலம் இயக்குநராகி உள்ளார் நடன அமைப்பாளர் பிருந்தா.
மதன் கார்க்கி நாயகனாகவும் காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகிய இருவரும் நாயகிகளாகவும் நடித்துள்ள இப்படம், விரைவில் வெளியீடு காண உள்ளது.
"மனித வாழ்க்கையில் உறவுகள் மிக முக்கியமானவை. ஆனால், மனிதன் அதை உணர்வதில்லை. எந்த உறவும் கையில் இருக்கும்போது அதன் அருமை தெரியாது. ஆனால், கைவிட்டுப் போனதும் தவிப்போம். இதுகுறித்து அலசப் போகிறது இந்தப் படம்," என்கிறார் பிருந்தா.
அதற்காக, இது நீதியைப் போதிக்கும் படம் என்று கருத வேண்டாம் என்றும் அது தமது வேலை அல்ல என்றும் கூறுகிறார். இனி பிருந்தா பேசுவதைக் கேட்போம்.
"மதன் கார்க்கி இந்தக் கதையை என்னிடம் கொண்டு வந்தார். அவர் அதை அழகாக விவரிக்கத் தொடங்கியதுமே என் மனசுக்குள் ஒரே ஒரு மனிதரின் நினைவுதான் வந்தது. அவர் துல்கர் சல்மான் தான்.
"இரண்டு கோபக்காரப் பெண்களின் ஊடாக ஓர் இளைஞன். அவனுக்கு நேரும் அனுபவங்கள் எல்லாம் சுவாரசியமாக இருக்கும்.
"மதன் கார்க்கி இந்தக் கதையை மிக நேர்த்தியாக செதுக்கி உள்ளார். ஒரு விஷயத்தை சொல்லும்போது நறுக்கு தெறித்தார்போன்று மிக அளவாகச் சொல்ல வேண்டும். அதை உணர்ந்து அருமையாக தன் எழுத்தாற்றலை வெளிப்படுத்தி உள்ளார் கார்க்கி.
"இந்த கதைக்கு துல்கர்தான் பொருத்தமாக இருப்பார் என்பது எனது எண்ணமாக இருந்தது. திரையில் இந்தக் கதையை மிக எளிமையாக சொல்லி இருக்கிறேன். கதைக்கேற்ற காட்சி அமைப்புகள்தான் இருக்கும்.
"துல்கர் சல்மானைப் பார்த்து கதை சொன்னபோது, முழுமையாக கேட்டவர், 'கண்டிப்பாக நாம் செய்வோம்' என்றார். அவர் கொஞ்சம்கூட அப்பழுக்கு இல்லாத ஆத்மா எனலாம்.
"வசதியான வீட்டுப் பிள்ளை. தந்தை மிகப்பெரிய நடிகர். ஆனால், துல்கரிடம் அவ்வளவு பணிவு, தெளிவு. சொன்ன நேரத்திற்கு வந்து நடித்து முடித்து அமைதியாக கிளம்பிவிடுவார்.
"ஒரு வார்த்தை கூட குறை சொல்லிவிட முடியாதபடி நடந்துகொள்வார். அந்தளவு நிறைகுடம். எல்லாவற்றிலும் தனித்துத் தெரிகிறார். திறம்பட நடிக்கிறார்.
"இவ்வளவு சிறு வயதில் அவரிடம் காணப்படும் பக்குவம் வியப்பை அளிக்கிறது. என் படத்தின் நாயகன் என்பதால் இப்படிச் சொல்லவில்லை. மனதார இந்தப் பாராட்டை தெரிவிக்கிறேன்.
"துல்கர் சல்மானிடம் பேசினால் ஒருசில நிமிடங்களில் அவருடன் நெருக்கமாகிவிடுவோம். ஒரு சின்ன விஷயத்தைக்கூட மிக அழகாக மெருகேற்றிவிடுவார்.
"இந்தப் படத்தைப் பொறுத்தவரை அவர் மீது மொத்த சுமையையும் தூக்கி வைக்கவில்லை. ஆனால், அவ்வாறு செய்தாலும் நிச்சயம் தாங்கிப் பிடிப்பார்," என்று மிகப் பெரிய பாராட்டுச் சான்றிதழை வாசிக்கிறார் பிருந்தா.
இந்தப் படத்துக்காக துல்கர் சல்மான் ஒரு பாடலையும் பாடியுள்ளார். அதற்கு இப்போதே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
கதாநாயகி அதிதி ராவ் பட உருவாக்கத்தில் வெகுவாக உதவி செய்தாராம்.
அவரும் துல்கரும் கச்சிதமாக நடித்ததால் 62 நாள்களுக்கு திட்டமிட்டிருந்த படப்பிடிப்பை 42 நாள்களிலேயே முடித்துவிட இயன்றதாகச் சொல்கிறார்.
"இந்தப் படமே அவர்களுடைய அன்பின் கொடைதான் என்பேன். இந்தப் படத்தில் நல்ல காதல் குறித்து சொல்லி இருக்கிறோம். ஒரு பெண்ணின் ஆக அதிகமான கொதிநிலை என்று சொல்லக்கூடிய மனநிலையைக்கூட விவரித்திருக்கிறோம்.
"காஜல் அகர்வாலை பொறுத்தவரை இதற்கு முன்பு அவரை இப்படியொரு கதாபாத்திரத்தில் பார்த்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு வெகுகாலம் முன்பே இதுபோன்ற பாத்திரங்களைக் கொடுத்திருக்க வேண்டும். அந்த அளவு அசத்தலாக நடித்துள்ளார்.
"அதிதி ராவ் குறித்து சொல்லவே வேண்டாம். என் குருநாதர் மணிரத்னம் படத்திலேயே நடித்த அனுபவம் உள்ளவர். அவரது இயல்பான நடிப்புக்கு நானும் ஒரு ரசிகை. என் மீதுள்ள அன்பின் காரணமாக துல்கர், அதிதி, காஜல் ஆகிய மூவரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அதற்காக அவர்களுக்கு நன்றி," என்கிறார் பிருந்தா.