நினைவாற்றல் குறைந்து அவதிப்படுவதாகத் தெரிவித்துள்ளார் முன்னாள் நடிகை பானுப்பிரியா.
முக்கியமான விஷயங்களை மறந்துவிடுவதாகவும் தாம் கற்றுக்கொண்டவற்றைக்கூட மறந்து போவது வருத்தம் அளிப்பதாவும் கூறுகிறார்.
பானுப்பிரியாவின் நிலையை அறிந்து திரையுலகத்தினரும் அவரது ரசிகர்களும் கவலையிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த 1980களில் தமிழ்ச் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் பானுப்பிரியா. ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜ் என அக்காலக்கட்டத்தில் முன்னணி கதாநாயகர்களாக இருந்த அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பானுப்பிரியா. அழகான கண்களைக் கொண்ட தென்னிந்திய கதாநாயகிகளில் இவருக்கும் இடமுண்டு. சிறந்த நடனக் கலைஞரும் ஆவார்.
கடந்த 1998ஆம் ஆண்டு ஆதர்ஷ் கவுஷல் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட பானுப்பிரியா திரையுலகில் இருந்து விலகி இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் பாண்டிராஜ் இயக்கிய ‘கடைக்குட்டி சிங்கம்’, அசோக் செல்வன் நடித்த ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் மறதிப் பிரச்சினையால் தவிப்புக்கு ஆளாகி உள்ளார் பானுப்பிரியா.
“சில ஆண்டுகளுக்கு முன்பு என் கணவரைப் பிரிந்துவிட்டதாக ஒரு வதந்தி பரவியது. அவர் இப்போது உயிருடன் இல்லாததால் அதுகுறித்துப் பேச விரும்பவில்லை.
“மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எனது உடல்நிலை குறித்தும் வதந்திகள் பரவின. அவை உண்மை என்று நம்பி நடிகை ராதா பதறியடித்துக் கொண்டு என்னைத் தொடர்புகொண்டு பேசினார். எனக்கு நடனத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. ஆனால் வயதான பின்னர் நடனத்திலும் ஆர்வம் குறைந்துவிட்டது. அண்மையில் படப்பிடிப்பின்போது எனக்கான வசனங்களைக்கூட மறந்துபோனேன்,” என்று பானுப்பிரியா தெரிவித்துள்ளார்.
திரையுலகில் உச்சத்தில் இருந்தபோது பானுப்பிரியாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவ்வப்போது சில பரபரப்பான செய்திகள் வெளியாகின. எனினும் அவை அனைத்தும் வதந்திகள் என அவர் மறுப்பு தெரிவித்தார்.
ஆதர்ஷ், பானுப்பிரியா தம்பதியர்க்கு அபிநயா என்ற மகள் உள்ளார். இருபது வயதான அபிநயா லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.