கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன் மார்பகப் புற்றுநோயாலும் மனஅழுத்தத்தாலும் அவதிப்பட்ட நோயாளியைப் பராமரிக்க வேண்டிய சூழ்நிலை, தாதியாகப் பணியாற்றிய திருமதி கலைக்கு ஏற்பட்டது.
அந்த நோயாளிக்குப் புற்றுநோய் சிகிச்சையால் காய்ச்சல் ஏற்பட்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோயுடன் குடும்ப பிரச்சினைகளும் சேர்ந்து அவரை வாட்டின. அதனால் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. தற்கொலை எண்ணங்களும் ஏற்பட்டன.
“உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்ட ஒருவரைப் பராமரிப்பது மாறுபட்ட அனுபவமாக இருந்தது. உணர்ச்சிபூர்வமான அனுபவம் அது,” என்று குறிப்பிட்டார் திருமதி ரா.கலை செந்தில்குமார், 54.
ஒரு தாதியாக மருத்துவச் சேவை வழங்கியதற்கும் அப்பால், அவருக்குத் தேவைப்பட்ட மன ஆறுதலையும் திருமதி கலை வழங்கினார்.
சமூக ஊழியர்களின் உதவியையும் பெற்றுத் தந்து அவரது குடும்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவினார். புற்றுநோயிலிருந்து முழுமையாக குணம் அடைந்துவிட்ட அந்த நோயாளி, தற்போது திருமதி கலையின் நெருங்கிய நண்பர்.
“நோயிலிருந்து குணமடைந்ததுடன் அவரது பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார் இந்த ஆண்டின் ‘டான் சின் துவான்’ தாதியர் விருது பெற்ற திருமதி கலை.
நிபுணத்துவம், நற்குணம் ஆகிய தன்மைகளுடைய தாதியர்களை அங்கீகரிக்கும் இந்த விருது நிகழ்வு, 13ஆவது ஆண்டாக நவம்பர் 29ஆம் தேதியன்று நடைபெற்றது.
அதில் மூன்றாவது நிலைக்கான விருதைப் பெற்றார் திருமதி கலை. 32 ஆண்டுகளாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் பணியாற்றி வரும் திருமதி கலை, இந்து அறக்கட்டளை வாரியத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தொண்டூழியராகவும் சேவையாற்றுகிறார்.
“பள்ளி நாட்களில் மருத்துவத் துறை மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. ‘செயின்ட் ஜான்ஸ்’ இணைப்பாட நடவடிக்கையில் ஈடுபட்டு பல தாதிமை இல்லங்களுக்குச் சென்றேன். அவதிப்படும் பலரைக் கண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது,” என்றார் திருமதி கலை.
2005ஆம் ஆண்டில் மூப்பியல் ஆலோசனைத் துறையில் பட்டயக் கல்வியை முடித்த அவர், புற்றுநோய் தொடர்பான மருத்துவப் பிரிவில் தாதியராகப் பணியாற்றி வருகிறார். வாழ்நாள் கற்றலில் ஆர்வம் இருப்பதால் அவர் பல மேம்பாட்டுத் பயிற்சித் திட்டங்களில் பங்கும் பெற்றுள்ளார். தொடர்ந்து 2009ஆம் ஆண்டில் தலைமை தாதியர் சான்றிதழையும் பெற்றார்.
தாதிமைச் சேவையுடன் பல தொண்டூழிய சேவைகளிலும் ஈடுபட்டு வரும் திருமதி கலை, இந்து அறக்கட்டளை வாரியத்தின் தொண்டூழியராக தைப்பூசம், தீமிதித் திருவிழா, சிவராத்திரி, வருடாந்திர சுகாதார விழா போன்ற பல நிகழ்ச்சிகளுக்குத் தொண்டூழியராக மருத்துவச் சேவைகள் வழங்கி வருகிறார்.
அத்துடன் மூத்த தலைமுறை தூதராகவும் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
“தாதியராக இருப்பதற்குப் பொறுமையும் கருணையும் அவசியம். சவால்மிக்க தொழிலாக அது இருந்தாலும் மனநிறைவு அளிக்க வல்லது,” என்று வலியுறுத்தினார் திருமதி கலை.