கொரோனா கிருமி பெரும்பாலானவர்களை வீட்டிலேயே முடக்கியிருக் கிறது என்றாலும் இதர சிலர் 24 மணி நேரமும் உழைக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. அத்தகையோரில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களும் ஒரு பிரிவினர். கிருமி தொற்றும் ஆபத்துள்ளபோதிலும் கிருமிப் பரவலை தடுப்பதில் அயராது பாடுபட்டு வருகின்றனர் இவர்கள்.
கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட இடங்களைச் சுத்தம் செய்வதற்காகவே கிருமி ஒழிப்புப் பணிக்குழுவை அமைத்துள்ளது மருத்துவமனை, பள்ளி, வர்த்தகக் கட்டடங்கள் போன்ற இடங்களுக்கு சுத்திகரிப்புச் சேவை வழங்கி வரும் ‘ஐஎஸ்எஸ் வேர்ல்ட்’ நிறுவனம்.
நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்டுள்ள இந்த பணிக்குழு, 15 சிறு குழுக்களாக இயங்குகிறது. ஒவ்வொரு குழுவிலும் 3 முதல் 5 உறுப்பினர்கள் உள்ளனர்.
“இக்குழுவில் இடம்பெற்றுள்ள பலர், சார்ஸ் காலத்தில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள். அது இப்போது கைகொடுக்கிறது,” என்றார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஜீனா தோ.
நிறுவனத்தின் சுத்திகரிப்பு மேற்பார்வையாளரான திருமதி கலா தேவி, 38 வாரத்தில் ஆறு நாட்கள் பணியாற்றுகிறார்.
“ஒரு நாளில் வழக்கமாக இருமுறை சுத்தப்படுத்த வேண்டிய நுழைவாயில், முகப்பு, கதவு கைப்பிடி, மின்தூக்கி பொத்தான்கள், கழிவறைக் கதவுகள் போன்ற மக்கள் அடிக்கடி தொடும் இடங்களை இப்போது நான்கு முறை சுத்தம் செய்கிறோம்,” என்றார் மலேசியரான திருமதி கலா.
“கல்வி நிலையங்களைச் சுத்தப்படுத்துவது சற்று கடினம். மாணவர்கள் வந்துபோய் கொண்டிருப்பார்கள். வகுப்பறைகள், விரிவுரை மண்டபங்கள் போன்ற இடங்களில் நாற்காலி, மேசைகள் சுத்தம் செய்வது கடினம். தேர்வுகள் நடக்கும் சமயத்தில் ஆயிரக்கணக்கான மேசைகளையும் நாற்காலிகளையும் சுத்தம் செய்யவேண்டியிருக்கும். தேர்வுகளின்போது இரண்டு மணி நேர இடைவெளிக்குள் வேலையைச் செய்து முடிக்கவேண்டும்,” என்று குறிப்பிட்டார் திருமதி கலா.
தேசிய சுற்றுப்புற வாரியத்தின் வழிமுறைகள், ஆலோசனைகளின்படி சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்வதாகக் குறிப்பிட்ட சுத்திகரிப்பு சிறப்புப் பிரிவின் மூத்த நிர்வாகியான திரு அலேக்ஸ் ஹவ், 44, பொதுவான பலபயன் சவர்க்காரத்திற்கு பதிலாக கிருமிகளைக் கொல்லும் ரசாயனங்களை உபயோகிப்பதாகக் கூறினார்.
துறைசார்ந்த நிபுணர்கள் மூலம் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு ஊழியர்கள் எப்போதும் தயார்நிலையில் உள்ளனர் என்பதை திருமதி கலா குறிப்பிட்டார்.
கடந்த 1995ல் இலிருந்து இயங்கி வரும் ‘ஐஎஸ்எஸ் வேர்ல்ட்’ நிறுவனம் கிட்டத்தட்ட 1,700 வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குகிறது. ஏறத்தாழ 10,000 ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். இதில் கிட்டத்தட்ட 1,600 பேர் மலேசியர்கள். மலேசிய அரசு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை விதித்ததை அடுத்து அவர்களின் தங்குமிட வசதிகள், போக்குவரத்து, உணவு போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்து, பணி இடைவிடாமல் தொடர முயற்சி எடுத்துள்ளது.
பயத்துடன் பணியாற்றும் சுத்திகரிப்புத் துறையினர்
தொற்றுநோய் பரவலின்போது சுகாதாரத் துறையினரைப் போன்று முன்னணியில் பணியாற்றும் துப்புரவுத் துறையினருக்கும் ஆபத்துக்கான வாய்ப்பிருக்கிறது என்றார் ‘புராஜெக்ட் 27 ஹோல்டிங்ஸ் 27 கிளீன் ஹஸல்’ நிறுவனத்தின் இயக்குநர்களின் ஒருவரான திரு மஹெஸ்வரன் ராமசாமி, 25.
“கிருமி தொற்றிய ஒருவரின் காரைச் சுத்தும் செய்யும் பணி வந்தபோது ஊழியர்கள் பயந்தனர். அதனால் நாங்கள் அந்த பணியை மேற்கொள்ளவில்லை. எங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பில்லை. அந்த இடத்துக்குச் சென்றுதான் பணிசெய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.
“கழிவறை மூலம் கிருமி பரவும் வாய்ப்பு அதிகம். அதனால் அதற்கான கருவிகளைத் தனியாக வைத்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.
“அதிகமானோர் புழங்கும் இடங்களைச் சுத்தம் செய்யும்போது கிருமி தொற்றும் ஆபத்து அதிகமுள்ளது. முறையான பாதுகாப்பு உடைகளை அணிந்து முறையாக சுத்திகரிப்புப் பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள் என்றாலும் பயம் இருக்கவே செய்யும்,” என்றார் திரு மஹெஸ்வரன்.
“எனினும், இது எங்கள் பணி. கிருமிப் பரவலைத் தடுப்பதில் முழு முயற்சியுடன் இத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்,” என்று அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.