கொவிட்-19 கிருமித்தொற்றை எதிர்த்துப் போராடுவதில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் பணி உன்னதம். அச்சுறுத்தும் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்களைச் சமாளிக்கும் அதே வேளையில் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர்களுக்குச் சவால்கள் ஏற்படுகின்றன.
தேசிய தொற்றுநோய்கள் நிலையத்தின் (என்சிஐடி) ‘ஜே’ மருந்தகத்தில் தாதியர் நிர்வாகியாகப் பணியாற்றி வருகிறார் 34 வயது திருவாட்டி இம்ரானா பானு. கிருமி முறியடிப்புத் திட்டம் இங்கு நடப்பில் இருந்த காலகட்டத்தில் இவர் தம் மகளைப் பார்க்கவே இல்லை. தற்போது வாரஇறுதி நாட்களில் மட்டுமே தம் மகளைப் பார்க்கிறார்.
கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக தாதியாக அனுபவம் பெற்றிருந்தாலும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் தாதியர் நிர்வாகியாக பொறுப்பேற்றார் இம்ரானா. பொறுப்பேற்ற ஓராண்டிலேயே கொடூர நோய்ப்பரவல் நிலையைச் சமாளிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு அவர் மேல் விழுந்தது. இதனால் அவர் சில தியாகங்களைச் செய்யவேண்டிய நிலையும் நேர்ந்தது. தம் 13 வயது மகளைப் பிரிந்து தனியாக வாழவேண்டிய சூழல்.
“ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் என் மகள் மனம் உடைந்து போனார். அவருக்கு நிலைமையை எடுத்துச் சொல்லி நம்பிக்கை ஊட்ட வேண்டியதாக இருந்தது,” என்றார் இம்ரானா.
வேலை நேரத்தையும் மீறி கூடுதல் நேரத்திற்குப் பணியாற்றுவது, பொது விடுமுறைகளில் கட்டாயமாக வேலை செய்வது போன்ற சூழல்கள் இவர் வேலையில் அடங்கும். தமக்குத் தரப்பட்டுள்ள விடுப்பு நாட்களைக்கூட மகளுடன் கழிக்க முடியாத இந்த காலகட்டத்தில் பெற்றோரின் ஆதரவு தமக்குப் பக்கபலமாக அமைந்ததெனக் குறிப்பிட்டார் இம்ரானா.
“வேலை இரவில் மிக தாமதமாக முடியும். முன்பு என் மகள் என்னுடன் தங்கியிருந்தாள். ஆனால் எனது வேலையினாலும் நோய்ப்பரவலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய சூழ்நிலையாலும் அவர் இப்போது என் பெற்றோருடன் இருக்கிறார். சில நேரங்களில் நேரத்துடன் வீட்டிற்குச் சென்று மகளைப் பராமரிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டது,” என்றார் இம்ரானா.
கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியன்று இம்ரானாவுக்கு முன், தாதியர் நிர்வாகியாக பணியாற்றி வந்தவர், வேலையை விட்டு விலகினார். அதைத் தொடர்ந்து இவ்வாண்டு ஜனவரி தொடக்கத்திலேயே கொவிட்-19 நோய்ப்பரவலுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு என்சிஐடி தயாராகத் தொடங்கியது.
முழு நிர்வாகப் பொறுப்பையும் அப்போதுதான் புதிதாக ஏற்றிருந்தார் இம்ரானா. அத்துடன் அவரோடு வேலை பார்த்த மற்ற தாதியர் இளம் வயதினர். நிர்வாகப் பொறுப்பில் இருந்தவாறு சக ஊழியர்களை ஊக்குவிப்பது பெரும் சவாலாக இருந்தது என்று குறிப்பிட்டார் இம்ரானா. இம்ரானா வேலை பார்க்கும் ‘ஜே’ மருந்தகம், கிருமித்தொற்று மற்றும் டெங்கி சம்பவங்களைக் கவனித்து வருகிறது.
மற்ற நாட்களில் தாதியர் அனைவரும் ஒரே மாதிரியான வேலைகளைச் செய்தாலும், கிருமித்தொற்று காலத்தில் அவர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்படுவர். ஒரு குழு கிருமித்தொற்று நோயாளிகளைக் கண்காணிக்கும்; இரண்டாம் குழு தினசரி நடவடிக்கைகளைக் கவனித்துக்கொள்ளும்; மூன்றாவது குழு நிர்வாகப் பொறுப்புகளைக் கையாளும். அனைத்து குழுக்களையும் உள்ளடக்கி, நிர்வாகம் செய்வதுதான் இம்ரானாவின் பொறுப்பு.
“தற்போது சமூகக் கிருமித்தொற்று சம்பவங்கள் குறைந்து வருகின்றன. இருந்தாலும் நாம் தொடர்ந்து பாதுகாப்பாக நடந்துகொள்வது நல்லது. இந்த நெருக்கடியை நாம் நிச்சயமாக ஒன்றாக கடந்து வருவோம்,” என்ற நம்பிக்கையில் தம் தாயார் பொறுப்பையும் வேலையிடத்து பொறுப்பையும் முடிந்த அளவுக்குச் சிறப்பாக ஆற்றி வருகிறார் இம்ரானா.