சிங்கப்பூர் சீன கலாசார நிலையம் வழிநடத்தும் ‘மூ மூ பார்க்’ என்ற கலைக் கண்காட்சியில் குமாரி மித்ரா ஜீவானந்தனின் கலைப் படைப்பு ஒன்றும் இடம்பெறுகிறது.
எருது ஆண்டாக கருதப்படும் சீனப் புத்தாண்டை மையமாகக் கொண்டுள்ள இந்தக் கண்காட்சியில் மித்ரா தயாரித்துள்ள ‘டோரஸ் ஃபாரஸ்ட்’ என்ற மின்னியல் விளக்கப்படமும் இடம்பெறுகிறது. மித்ரா உட்பட மொத்தம் எட்டுக் கலைஞர்களின் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
இந்திய கலாசார அம்சங்களைக் கொண்ட தமது விளக்கப்படம் மற்ற கலைப் படைப்புகளிலிருந்து வேறுபடுகிறது என்று குறிப்பிட்டார் மித்ரா, 26.
“பூக்கள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களைக் கொண்டு மாடுகளைக் கௌரவிப்பது இந்திய கலாசாரத்தில் ஓர் அங்கம். அதனால் எனது படைப்பில் பூக்கள், பல வண்ண நிறங்கள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளேன்.
“ஆசியாவைச் சேர்ந்த பச்சைக்குத்தும் வடிவமைப்புகளையும் எனது படைப்பில் உள்ளடக்கியுள்ளேன். இயற்கையுடன் ஒத்துவாழும் முக்கியத்துவத்தைப் பற்றி பார்வையாளர்களைச் சிந்திக்க வைப்பதுடன் பலவகை உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் எனது விளக்கப்படத்தின் முக்கிய நோக்கம்,” என்றார் மித்ரா.
உலகத்தில் இயற்கை வளங்கள் குறைந்து வரும் வேளையில் இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் இவரது படைப்பு வலியுறுத்துகிறது.
மித்ராவின் விளக்கப்படத்திற்குரிய ‘கியூஆர்’ குறியீட்டை ‘ஸ்கேன்’ செய்தால் ஒரு கானகத்தில் எருது ஒன்று கண்ணில் புலப்படும் காட்சியைப் பார்க்கலாம்.
கானகத்தின் காப்பாளராக எருதைச் சித்திரிக்கும் நோக்கில் இந்தக் காட்சி அமைக்கப்பட்டது என்று மித்ரா தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டில் லசால் கலைக் கல்லூரியிலிருந்து நுண்கலைத் துறையில் பட்டம் பெற்ற மித்ரா தற்போது தன்னுரிமை விளக்கப்படக் கலைஞராக இருக்கிறார்.
மரினா ஒன் பகுதியில் அமைந்திருக்கும் ஃபேஸ்புக் வளாகத்தில் சுவர் விளக்கப்படம் தயாரித்ததும் இவ்வாண்டின் ‘ஆர்ட் வாக் லிட்டில் இந்தியா’ நிகழ்ச்சியில் கலைஞராக ஈடுபட்டதும் மித்ராவின் முக்கிய பணிகளில் சில.
சிங்கப்பூர் சீன கலாசார நிலையமும் ‘தி மெஷ்மைன்ட்ஸ்’ அறநிறுவனமும் இணைந்து நடத்தும் ‘மூ மூ பார்க்’ கண்காட்சி ஜனவரி 22ஆம் தேதி முதல் மார்ச் 28ஆம் தேதி வரை நீடிக்கும்.
வாகனத்தில் இருந்தவாறு இந்த ‘டிரைவ்-துரு’ கண்காட்சியைக் காணலாம். இந்தக் கண்காட்சி ஆசியாவிலேயே முதல்முறையாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. முப்பரிமாண கலைப் படைப்புகளைக் கொண்டுள்ள இந்தக் கண்காட்சியை நடந்துசென்று பார்ப்பதற்கான கட்டணம் $5. மின்சார காரில் சென்றபடி பார்க்க $10 கட்டணம் செலுத்தவேண்டும்.
இதற்கிடையே, சிங்கப்பூர் சீன கலாசார நிலையத்தில் இருபரிமாண வடிவத்திலான இதே கலைப் படைப்புகளைப் பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்.
கண்காட்சி குறித்த மேல்விவரங்களுக்கு singaporeccc.org.sg/moo-moo-park/ எனும் இணையப்பக்கத்திற்குச் செல்லலாம்.