ஆகப் பெரிய தமிழ் எழுத்து கோலம் வரைந்ததற்காக சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் மே 1ஆம் தேதி அன்று இடம்பெற்றார் 62 வயது ரங்கோலி கலைஞர் திருமதி விஜயலட்சுமி மோகன்.
கிட்டத்தட்ட 55 ஆண்டு காலமாக ரங்கோலி வரைந்து வரும் இவர், சிங்கப்பூர் சாதனைப் புத்தக்கத்தில் 35ஆம் முறையாக இடம்பெறுகிறார். தமிழ் எழுத்துக்கள் 5.8 X 3.0 மீட்டர் அளவிலும் மொத்த கோலம் 7.2 X 4.4 மீட்டர் அளவிலும் அமைக்கப்பட்டன.
வளர்தமிழ் இயக்கத்தின் 20ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி இந்த கோலத்தை உருவாக்கியதாக குறிப்பிட்டார் விஜயலட்சுமி.
தமிழ் மொழி மாதத்தில் ரங்கோலி வரைவதைப் பற்றி சொல்லிக் கொடுக்க விஜயலட்சுமி நான்கு பயிலரங்குகள் நடத்தினார்.
பயிலரங்குகளில் பங்கேற்ற 24 பேருடன் சிங்கப்பூர் பெண்கள் சங்கத்தின் எட்டு உறுப்பினர்கள் இணைந்து கோலத்தை உருவாக்க கைகொடுத்தனர்.
“பயிலரங்குகள் மூலம் பல இன மக்களுக்கு ரங்கோலி கலையைப் பற்றி கற்று தந்தேன். தமிழர் பண்பாட்டைப் பல இன மக்களிடம் பகிர்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. வருங்கால சந்ததியினருக்கு நினைவில் நிற்பதற்காக இந்த கோலப் படைப்பை பிரம்மாண்டமாக வரைந்தேன்,” என்றார் விஜயலட்சுமி.
படம்: விஜயலட்சுமி மோகன்
செய்தி: எஸ்.வெங்கடேஷ்வரன்