இரண்டு மகள்களுக்கு தாயாரும் முதுகலைப் பட்டதாரியுமான திருவாட்டி கங்காதேவி ரௌண்டன் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையில் 14 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறார்.
தனிப்பட்ட வாழ்க்கை, படிப்புக்கு இடையே 34 வயது கங்காதேவி வேலையிலும் தடம் பதித்து வருகிறார்.
23ஆம் ‘ரோட்டா’ தளபதி பயிற்சித்திட்டத்தில் பங்குபெற்ற அவர் கடந்த ஜுன் 30ஆம் தேதி ‘ரோட்டா’ தளபதியாக பதவியேற்றார்.
பயிற்சிவகுப்பில் ஆக மூத்தவராக இருந்தாலும் வயதைத் தடையாகப் பார்க்காமல் கடும் முயற்சி எடுத்து உழைத்தார் கங்கா தேவி.
பயிற்சித்திட்டத்தின் கல்விப் பிரிவில் ஆகச் சிறப்பாக விளங்கிய தற்கான விருதைப் பெற்றிருப்பது அதற்கான பலன். குடிமைத் தற்காப்பு படையில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவம் கைகொடுத்தது என்று குறிப்பிட்டார் கங்காதேவி.
“என்னுடன் பயிற்சித்திட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும் 20களில் இருந்தனர். முழு நேர தேசிய சேவையாளர்களும் 20 வயதுக்குள் இருந்தனர். அவர்களுடன் போட்டி போட்டு உடற் பயிற்சி, படிப்பு ஆகியவற்றில் ஈடுபடுவதற்கு அதிக சகிப்புத்தன்மை தேவைப் பட்டது.”
“பயிற்சித்திட்டத்திற்கு வருவதற்கு முன் கொஞ்சம் பயந்தேன். இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவான நான் எப்படி அவர்களுடன் ஓடி ஆடி பயிற்சி செய்யப்போகிறேன் என்ற அச்சம் இருந்தது,” என்று கங்காதேவி கூறினார்.
பயிற்சித் திட்டத்தில் நிறைய நண்பர்கள் உருவானதும் மேல் அதிகாரிகள் நன்கு ஊக்கம் தந்ததும் பயிற்சி சுமூகமாக நிறைவடைய வழிவகுத்தது என்றார் அவர்.
இவ்வாண்டு ஜனவரி மாதம் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பொது நிர்வாகத் துறையில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார் கங்காதேவி.
பிடிவாதமும் விரும்பியதை அடைவதற்கு அரும்பாடுபடும் குணமும் தமது சிறுவயதிலிருந்தே உடனிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கணவர், தாயார், அக்கா என்று குடும்ப உறுப்பினர்கள் தந்த ஆதரவும் பணியில் சிறக்க உதவியது என்றார் கங்காதேவி.
“நல்ல புரிந்துணர்வு உள்ள கணவர் இருக்கிறார். என் முதல் பிள்ளை பிறந்தபோது என் பட்டப்படிப்பில் அது ஒரு முக்கிய ஆண்டு. சம்பளம் இல்லாத விடுப்பு எடுத்து என் தாயார் வீட்டில் இருந்து பிள்ளையை பராமரித்தார். என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் என் இலக்கை அடைவதில் பங்கு வகித்தனர்,” என அவர் கூறினார்.
குடிமைத் தற்காப்பு படையின் ‘ஹேஸ்மேட்’ (Hazmat), கடல்துறை தீயணைப்பு ஆகிய இரண்டு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற அவர், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக் கழகத்தில் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
குடிமைத் தற்காப்பு படையில் சேர்ந்த முதல் சில ஆண்டுகளில் ஈசூன் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றியபோது மனதில் நிற்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக நினைவுகூர்ந்தார் கங்காதேவி.
“ஈசூன் வீடு ஒன்றில் கொடூரமான தீ சம்பவம் நிகழ்ந்தது. ஒரு பிள்ளையும் அம்மாவும். சன்னல் வெளியே, காற்றுக் குளிர்வசதிப் பெட்டிக்கு அருகில் இருந்த குறுகலான சட்டத்தில் நின்றுகொண்டிருந்தனர். நானும் என் குழுவும் அந்த பிள்ளையையும் அம்மாவையும் காப்பாற்றினோம். அது நான் பணியாற்றிய முதல் பெரிய தீச் சம்பவங்களில் ஒன்று,” என்றார் கங்காதேவி.