இந்து இளங்கோவன்
பாரம்பரிய கலைகளில் தூய்மையான வடிவம் என ஒன்றும் இல்லை, அவை உண்மையான சாரத்தை இழக்காமல் காலத்துக்குத் தகுந்தவாறு வளர்வதாகவும் மாற்றம் காண்பதாகவும் கூறுகிறார் கலா ்சாரப் பதக்கம் பெற்ற நடனக் கலை முன்னோடியான திருமதி சாந்தா பாஸ்கர்.
பரதநாட்டியம் போன்ற பாரம்பரிய நடன வடிவங்கள் நேரத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப மாறும் தன்மையைக் கொண்டுள்ளபோதும் முக்கியமான மரபுகளையும் பண்பு களையும் தொடர்ந்து பேணிக் காப்பது அவசியம் என்பது 'ரூட்ஸ்' (ROUTES) என்ற கண்காட்சியில் இடம்பெறும் ஆறு முன்னோடிக் கலைஞர்கள் முன்வைத்த கருத்தாகும். அவர்களில் திருமதி சாந்தா பாஸ்கரும் ஒருவர்.
சிங்கப்பூரின் பல்வேறு பாரம்பரிய நடனக் கலைகளின் வேர்கள், அவை கடந்து வந்த பாதைகள், மின்னிலக்கம் சூழ்ந்த காலத்தில் அவற்றின் நிலை, கிருமித்தொற்று உருவாக்கிய சவால்களுக்கு மத்தி யில் அவை தொடர்ந்து வளர்ந்து வரும் விதம் எனப் பல அம்சங்களை முப்பரிமாண அனுபவக் கண்காட்சியாக உருவாக்கியுள்ளது தேசிய கலைகள் மன்றம்.
ஸ்டாம்ஃபோர்ட் கலைகள் நிலையத்தில் நடைபெறும் ரூட்ஸ் கண்காட்சி, செப்டம்பர் 12ஆம் தேதி வரை பொதுமக்களின் பார்வைக்கு திறந்திருக்கும்.
முப்பரிமாணப் படிம (ஹோலோகிராஃபிக்) தொழில்நுட்ப உதவியோடு கண்காட்சி வடிவம் பெற்றுள்ளது. பார்வையாளர்கள் தனிப்பட்ட இருக்கைகளில் வலைக்கம்பித் திரைையச் சுற்றி அமர்ந்திருப்பர்.
கலைஞர்கள் பார்வையாளர்களுக்கு மத்தியில் அமர்ந்து நேர்காணல் செய்யப்படுவது போன்ற உணர்வைத் தருகிறது இந்த கண்காட்சி.
கிருமித்தொற்றின் தொடக்கத் திலிருந்து கலைஞர்கள் பல்வேறு தடைகளை எதிர்கொண்டு வருகின்றனர். நடன, நாடக ஒத்திகைகள், நிகழ்ச்சிகள், அரங்கேற்றங்கள் அனைத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கலைஞர்கள் பயிற்சி செய்வதில்கூட சவால்களைச் சந்தித்து வருகின்றனர்.
இருப்பினும், தொழில்நுட்பத்தையும் மின்னிலக்க மயமாக்கத்தை யும் துடிப்போடு பயன்படுத்தி கலைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் உத்திகளை அவர்கள் பயன் படுத்தி வருகின்றனர்.
சமகாலக் கலைகள் இந்த மாற்றத்தை எளிதில் ஏற்றுக்கொண்டாலும் பரதநாட்டியம் போன்ற பாரம்பரியப் படைப்புக் கலைகளுக்குத் தொழில்நுட்பமயம் ஒரு நிரந்தரத் தீர்வா என்ற கேள்வி எழலாம்.
"கொவிட்-19 எங்களது கலைப் பயணத்தை முடக்கவில்லை. கலைஞர்களாகிய எங்களை மேலும் சிந்திக்க வைத்துள்ளது, புதுப் புதுப் பரிமாணங்களில் நடனக் கலையை உருவாக்க ஊக்கம் தந்துள்ளது.
"கடந்த ஒன்றரை ஆண்டாக எங்களது பாஸ்கர் கலைகள் கழகம் நடனமணிகளை மீண்டும் மேடை ஏற்றுவதற்கான வழிகளை ஆராய்ந்துள்ளது. மாற்றத்தை வரவேற்று புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்வது வளர்ச்சியின் அறிகுறி." என்றார் திருமதி சாந்தா பாஸ்கர்.