விழிப்புணர்வைச் சாடும் ‘வோக்கிஸம்’ தவறு செய்தவர்களைப் புறக்கணிக்கும் ‘கேன்சல் கல்ச்சர்’, உணர்வுபூர்வமாக மற்றவரைத் துன்புறுத்தும் ‘கேஸ்லையிடிங்’ போன்ற சிந்தனைகள் கடந்த நான்கு ஆண்டு அளவில் சிங்கப்பூரர்களிடையே பிரபலமாகியுள்ளன என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா கூறினார். சமூக ஊடகம் இவற்றை வளர்த்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இந்தச் சிந்தனைகளைப் புதிது என்று சொல்லிவிட முடியாது. ஆனால், தற்போதைய தலைமுறையில் அவை புது அவதாரத்தில் பிரபலம் கண்டுள்ளன. கடந்த காலத்தைவிட இப்போது இச்சிந்தனைகள் பெருகவும் வேகமாகப் பரவுவதற்கான தன்மையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அவற்றின் தாக்கமும் பெரிதாக இருக்கலாம்,” என்றார் அமைச்சர்.
தவறு செய்த ஒருவரை உடனே புறக்கணிப்பதற்குப் பதிலாக சூழ்நிலையின் உண்மை நிலவரத்தைப் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றவாறு கலந்துரையாடலை அமைத்துக்கொள்வதே சிறந்தது என்றும் அமைச்சர் மேலும் அறிவுறுத்தினார்.
‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ என்ற சமூகநல அமைப்பு ஆகஸ்ட் 7ஆம் தேதி ஏற்பாடு செய்த இரண்டு பாகக் கருத்தரங்கின் முதல் பாகத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அமைச்சர் இந்திராணி பேசினார். ஆகஸ்ட் 15ஆம் தேதி நிகழ்ந்த இரண்டாம் பாகத்தில் பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
கல்விக்கழகங்கள், ஆசிரியர்கள், கொள்கைத் தயாரிப்பாளர்கள், அடித்தளத் தலைவர்கள், சமுதாய ஆர்வலர்கள் என கிட்டத்தட்ட 140 பங்கேற்பாளர்கள் இந்நிகழ்வில் ஈடுபட்டனர்.
ஒரு பெரிய பிரச்சினையாக உருமாறக்கூடிய சூழ்நிலையை அமைதிப்படுத்தவும் அனைவருக்கும் ஒரு கற்றல் வாய்ப்பாக அது அமைகிறது,” என்றார் அமைச்சர் மாலிக்கி.
இரண்டாம் பாக கலந்துரையாடலின் பேச்சாளர் குழுவில் இருந்த முனைவர் கல்பனா விக்னேசா 2018ஆம் ஆண்டில் தமக்கு ஏற்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
கடுமையான தலைவலி பிரச்சினைக்கு நரம்பியல் மருத்துவர் ஒருவரை தாம் நாடியபோது, தமது கருப்பு நிற தோலை எப்படி மாற்ற முடியாதோ அதைப் போல் தமது தலைவலிக்கும் எந்தத் தீர்வும் இல்லை என அந்த மருத்துவர் தம்மிடம் கூறியதாகக் கூறினார். இச்சம்பவத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட முனைவர் விக்னேசா, மருத்துவத் துறையின் நடைமுறைகளையும் அவரைப் போல மற்றவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் ஒட்டி அப்பதிவு நல்ல கலந்துரையாடல்களை உருவாக்கியதாகச் சொன்னார்.
“ஒருவரை தாக்குவதற்குப் பதிலாக அந்தப் பிரச்சினையை வெளிப்படுத்தலாம். ஒருவரை தாழ்த்தி பேசுவதற்குப் பதிலாக ஒரு சிந்தினையைப் பற்றி வாதமிடலாம்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் செய்யும் குற்றத்தைவிட அந்த மனிதர் பல அம்சங்களில் நுட்பமிக்கவர்,” என்றார் கொள்கை ஆய்வுக் கழகத்தின் ஆய்வாளரான முனைவர் விக்னேசா.
“வளர்ந்து வரும் இணையத்தில் ஒருவித சீரமைப்பு இருந்து வருவதாக தெரிகிறது,” என்றார் நகைச்சுவைக் காணொளிகளையும் பதிவுகளையும் தயாரிக்கும் ‘மினிஸ்திரி ஆஃப் ஃபனி’ என்ற ஊடகத் தளத்தின் இணை நிறுவனரான திரு ஹரேஷ் திலாணி.