1950களிலிருந்து இந்த வட்டாரத்தில் நடைபெற்ற மோட்டார் பந்தயங்களில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்து, தமக்கென ஒரு பெயரை உருவாக்கியவர் திரு சீத்தாராம் சங்கரதாஸ்.
வீ. பழனிச்சாமி
மோட்டார்சைக்கிள், விரைவு கார் பந்தயம் என்றாலே அதில் பொதுவாக மேலைநாட்டவர்தான் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். அது அந்தக் காலம் தொட்டு இருந்து வந்துள்ளது.
இதுபோன்ற எண்ணம் 1950-60களிலும் நிலைத்திருந்த சமயத்தில், யாருக்கும் அவ்வளவு அறிமுகம் இல்லாத சீத்தாராம் சங்கரதாஸ் எனும் ஆடவர் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து இந்த வட்டாரத்தில் நடைபெற்ற மோட்டார் பந்தயங்களில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்தார்.
குறிப்பாக, 1956ல் சிங்கப்பூர் மோட்டார் மற்றும் விளையாட்டுச் சங்கத்தில் இடம்பெற்ற ஒரே இந்தியர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தக் காலத்தில், வாரயிறுதி என்றாலே ஓல்டு அப்பர் தாம்சன் ரோடு பகுதி யில் நடைபெற்ற விறுவிறுப்பான மோட்டார் சைக்கிள் மற்றும் விரைவு கார் பந்தயங்களைப் பார்க்க மக்கள் கூட்டம் திரண்டிருக்கும்.
பல மோட்டார் பந்தயங்களில் பல வெற்றிகளைக் கண்ட திரு தாஸ், பல ஆபத்துகளையும் சந்தித்து அவற்றிலிருந்து மயிரிழையில் தப்பித்தும் இருக்கிறார். இதன் காரணத்தாலேயே அவரது மனைவி சீதாவும் குடும்பத்தாரும் இந்தப் போட்டிகளில் பங்கேற்பதை நிறுத்தும்படி அவரை வற்புறுத்தி வந்தனர்.
குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த திரு தாஸ், குடும்பத்தாரின் விருப்பத்துக்கு இணங்க தாம் அதிகம் விரும்பிய மோட்டார் பந்தயங்
களிலிருந்து ஓய்வுபெற்றார்.
சிங்கப்பூரின் பெயரை இந்த வட்டாரத்தில் நிலைநாட்டிய திரு சங்கரதாஸ், கடந்த மாதம் 27ஆம் தேதி, தமது 91வது வயதில் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து நிரந்தர ஓய்வுபெற்றார்.
முதிய வயது காரணத்தால் அவ்வப்போது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட திரு தாஸ், சில பக்கவாதப் பிரச்சினைகளைச் சந்தித்திருந்தாலும் தமது மனவலிமையால் அவற்றைச் சமாளித்து வந்தார் என்று தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார் திரு தாஸின் ஐந்து மகன்களில் மூத்தவரான 63 வயது திரு கஜேந்திரன்.
கடந்த ஆண்டு பொதுத் தேர்தலின் வாக்களிப்பு நாளன்று உற்சாகத்துடன் வாக்களிக்கப் புறப்பட்ட திரு தாஸ், நிலைத்தடுமாறி கீழே விழுந்ததால் அவரது இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது.
மொத்தம் 69 நாள் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய திரு தாசின் உடல்நிலை அப்போதிலிருந்து படிப்படியாக மோசமடையத் தொடங்கியது.
கடந்த மாதம் 27ஆம் தேதி காலையில் தந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது என்ற தகவல் அறிந்து அவரது வீட்டுக்கு விரைந்தார் மூத்த மகன். ஆனால் சில வினாடிகளில் அவரது உயிர் பிரிந்தது.
திரு சங்கரதாஸின் மறைவு பற்றி, அவரது இளைய சகோதரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு எஸ். சந்திரதாஸ் கூறுகையில், "பல வெற்றி களைச் சாதித்த என் அண்ணன், பின்னாளில் தமது குடும்பத்தாரின் முழு ஆதரவுடன் வாழ்நாளை மகிழ்ச்சியுடன் கழித்தார்," என்றார்.
சிங்கப்பூரின் முன்னாள் தேசிய காற்பந்து வீரரான திரு எஸ். ராஜகோபாலின் மாமா திரு சங்கரதாஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"1950களிலும் 60களின் தொடக்கத்திலும் சிங்கப்பூரின் மோட்டார் விளையாட்டு அரங்கில் மிகப் பிரபலமாகத் திகழ்ந்த இந்தியரான என் தந்தையாரின் சாதனைகள் மறக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் அவரைப் பற்றி வெளிவந்த பல செய்திக் கட்டுரைகளை இந்திய மரபுடைமை நிலையத்துக்கு நன்கொடையாக அளிக்க எங்கள் குடும்பம் முடிவு செய்தது," என்றார் திரு கஜேந்திரன்.