இளையர்கள் மற்றும் குழந்தைகளிடையே தமிழ் ஆர்வத்தைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டு 'தமிழ் மணம்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது, சிங்கப்பூரில் செயல்படும் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம்.
பிப்ரவரி 26ஆம் தேதி இணையம் வழி நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, வாழும் மொழியாக தமிழ் நீடித்து நிலைத்திருக்க இன்றைய இளையர்களின் ஈடுபாடு எவ்வளவு முக்கியமானது என்பதையும் அவர்
களிடத்தில் தமிழ் ஆர்வத்தைத் தூண்டுவது எவ்வளவு இன்றியமையாதது என்பதையும் உணர்த்துவதாக அமைந்தது.
சிறப்பு விருந்தினராக, தேசிய நூலக வாரிய தமிழ் மொழிச் சேவைகள் பிரிவின் தலைவர் திரு
து. அழகிய பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியதோடு, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு கலந்துரையாடல் மூலம் பதில் அளித்தார்.
அவர் தமது சிறப்புரையில், தமக்கு எவ்வாறு தமிழ் மொழி மீது ஆர்வம் ஏற்பட்டது என்பது பற்றியும் அதற்குத் தமது தந்தை எவ்வளவு ஊக்கமளித்தார் என்பது பற்றி யும் சுவைபட விவரித்தார்.
அதே ஆர்வம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பட்டம் பெற்ற தம்மை, பின்னாளில் எவ்வாறு உந்திச்சென்று தொலைக்காட்சி, வானொலி, நூலகம் என தமிழ் மொழி சம்பந்தப்பட்ட துறைகளிலேயே முழுநேர வேலையை அமைத்துக்கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது என்பதையும் திரு அழகிய பாண்டியன் பகிர்ந்துகொண்டார்.
தேசிய நூலக வாரியம் தமிழுக்காகத் தொடர்ந்து வழங்கிவரும் சேவைகளைப் பட்டியலிட்ட அவர், அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம், வாரியத்துடன் கைகோத்து நூல் குறிப்பு எழுதி, ஞாயிறுதோறும் தமிழ் முரசு நாளிதழில் வெளிவர தொண்டூழியம் புரிந்தது பற்றியும் குறிப்பிட்டார்.
அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் சௌந்தர ராஜன், துணைத் தலைவர் முத்துமாணிக்கம், பேராசிரியர் முனைவர் சுப. திண்ணப்பன், ஏற்பாட்டுக் குழுத்
தலைவர் குமரேசன் ஆகியோர் உரையாற்றிய நிகழ்ச்சியை செல்வமுத்துகுமரன் வழி நடத்தினார்.
'தமிழ் மணம்' என்ற தலைப்பு, தமிழைப் பரப்புகின்ற நோக்கத்துடன் எவ்வளவு ஒன்றிப்போயிருக்கின்றது என்பதைப் பற்றிப் பேசிய முனைவர் திண்ணப்பன், தமிழிலே இருக்கக்கூடிய மூன்று "ந"கரங்களுக்கிடையேயான (ண, ன, ந) சிறப்பு பற்றியும் எடுத்துரைத்தார்.