உத்தமம் எனும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் 21வது உலகத்தமிழ் இணைய மாநாட்டை அடுத்த மாதம் 15 முதல் 17ஆம் தேதி வரை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்துகிறது.
சென்னை பத்திரிகை மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இதில் மன்றத்தின் தற்போதைய தலைவர் இலங்கை த.தவரூபன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளுவன், உத்தமத்தின் முன்னாள் தலைவர் மா. கணேசன் , செயல் இயக்குநர் இ.பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
'தொழில்துறை 5.0ல் தமிழின் பங்கு' என்பது மாநாட்டின் முக்கியக் கருப்பொருளாக இருக்கும்.
இம்மாநாட்டில் தமிழ் மனித இயந்திரவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயற்கை மொழி ஆய்வுகள் ஆகிய தலைப்புகளில் இந்தியா, இலங்கை, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களின் தமிழ், கணினி அறிவியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுக் கட்டுரை படைப்பர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் வெவ்வேறு தலைப்புகளில் சிறப்புரை ஆற்றுவர்.
பயிலரங்குகள், தமிழில் உருவாக்கப்பட்ட மென்பொருள்கள் சார்ந்த படைப்புக்கள் குறித்த கண்காட்சி ஆகியவையும் இடம்பெறும்.
https://tamilinternetconference.org என்ற இணைய முகவரியில் மாநாடு குறித்த முழு விவரங்களைப் பெறலாம்.
பல்வேறு அறிஞர்கள் சிறப்புரை ஆற்றும் இம்மாநாட்டில் பங்குகொண்டு பயன்பெறும்படி ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ் தொழில்நுட்ப ஆர்வலர்கள், தொழிற்துறையினர் போன்றோருக்கு மாநாட்டு ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கான பதிவுகளை மாநாட்டு இணையத்தளத்தில் மேற்கொள்ள முடியும்.