தமிழர் மரபைப் பறைசாற்றும் விதமாக வேட்டியில் 247 தமிழ் எழுத்துகளையும் கைப்பட எழுதி சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் இந்தியர் நற்பணிச் செயற்குழு.
இந்த சாதனை இம்மாதம் 27ஆம் தேதி (சனிக்கிழமை) புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாட்டில் நடைபெற்ற ‘மங்களப் பொங்கல்’ விழாவில் அரங்கேறியது.
அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்களும் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களும் தமிழ் எழுத்துகள் அனைத்தையும் இரண்டு வேட்டிகளில் எழுதுகோலைக் கொண்டு கைப்பட எழுதினர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சுகாதார, சட்ட அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம், வேட்டி ஒன்றில் ஆயுத எழுத்தினை எழுதி இச்சாதனை முயற்சியில் இணைந்துகொண்டார்.
காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 4ல் உள்ள கூடைப்பந்து அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழர் மரபை வலியுறுத்தும் வகையில், களிப்பூட்டும் பல்வேறு அங்கங்கள் இடம்பெற்றன.
பறையிசை, பொங்கலிடுதல், உறியடி என களைகட்டிய விழாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கலந்துகொண்டனர். குறிப்பாக, கதை சொல்லும் அங்கமும் வண்ணம் தீட்டும் போட்டியும் சிறார்களைக் கவரும் வண்ணம் அமைந்தன.
மேலும், இளையர்களிடம் தமிழ் உணர்வை மேம்படுத்தும் முயற்சியாக ‘புதையல் வேட்டை’, ‘சொல்லாடலை நடித்துக் காட்டிக் கண்டுபிடித்தல்’ என மொழி சார்ந்த போட்டிகளும் இடம்பெற்றன.
இவற்றுடன், பொங்கல் திருநாளின் வரலாற்றுக் குறிப்புகளை தெரிந்துகொள்ள அமைக்கப்பட்டிருந்த சாவடி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதியம் சைவ உணவும் வழங்கப்பட்டது.
“பொங்கல் திருநாளின் சிறப்பையும் தமிழ் மொழியின் மகத்துவத்தையும் சிங்கப்பூரர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாகவே தமிழர் பாரம்பரிய உடையான வேட்டியில் இந்தச் சாதனை முயற்சியை மேற்கொண்டோம். இளையர்களிடையே நம் மரபு பற்றிய விழிப்புணர்வையும் இவ்விழா கொண்டுசேர்த்தது மகிழ்ச்சியளிக்கிறது,” என்று கூறினார் பொங்கல் விழா ஏற்பாட்டுக்குழுத் தலைவர் சுந்தர் பிலவேந்தர்ராஜ், 35.
“வேட்டியில் தமிழ் எழுத்துகளை எழுதியது புதுவித அனுபவமாக இருந்தது. இது போன்ற முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டும்,” என்று கூறினார் இயந்திரப் பொறியாளரான மணி ஜெயகாந்தன், 35.
“அனைவருடனும் இணைந்து பொங்கல் திருநாளைக் கொண்டாடியது மிகுந்த மகிழ்ச்சியளித்தது. ஊசி நூல் கோர்த்தல் போன்ற விளையாட்டுகள் இன்பமூட்டுவதாக இருந்தன,” என்று கூறினார் திருவாட்டி கிருஷ்ணன் சரோஜா, 68.