ஆஸ்திரேலியா: சீனா, ஹாங்காங்கிலிருந்து வரும் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை கட்டாயம்
சீனா, ஹாங்காங், மக்காவ் ஆகியவற்றிலிருந்து ஆஸ்திரேலியா செல்வோர் தங்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இல்லாததை உறுதிப்படுத்த பயணத்துக்கு முன்பு கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.
பயணம் மேற்கொள்வதற்கு முன்பு 48 மணிநேரத்துக்குள் அவர்கள் பரிசோதனையை மேற்கொண்டிருக்கவேண்டும்.
இம்மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து இந்த விதிமுறை நடப்புக்கு வரும்.
இது ஒரு தற்காலிகமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று ஆஸ்திரேலியாவின் சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் கூறினார்.
கனடாவும் அதே போன்ற விதிமுறையை அறிவித்தது.
இந்நிலையில் வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோ, சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதித்துள்ளது.
கொவிட்-19 கிருமிப் பரவலை முற்றிலும் அழிக்கும் போக்கை அண்மையில் சீனா திடீரெனக் கைவிட்டது.
அதையடுத்து அந்நாட்டில் அடையாளம் காணப்படாத மோசமான கொவிட்-19 கிருமி வகை பரவிக்கொண்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
அதனால் பல நாடுகள் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கான விதிமுறைகளை முடுக்கிவிட்டுள்ளன.