சீனா: புதிய கொரோனா கிருமிச் சம்பவங்கள் குறைந்து வருகின்றன
‘கொவிட்-19’ எனப்படும் கொரோனா கிருமித்தொற்று தொடர்பான சம்பவங்கள் மூன்றாவது நாளாக குறைவான எண்ணிக்கையில் பதிவாகியுள்ளதாக நேற்று சீனா கூறியது.
கிருமித்தொற்று பரவல் இனி எப்படி உருவெடுக்கும் என்பதை முன்னுரைப்பது முடியாத ஒன்று என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அடேனம் கெப்ரியசுஸ் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் சீனா இந்த அறிவிப்பைச் செய்துள்ளது. நேற்று 2,009 புதிய கிருமித்தொற்று சம்பவங்களும் மேலும் 142 உயிரிழப்புகளும் பதிவானதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இத்துடன் சீனாவில் 68,000க்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,665ஆக உள்ளது.
மற்ற நாடுகளில் 500க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கிட்டத்தட்ட 30 நாடு களுக்குப் பரவியுள்ள கொரோனா கிருமித்தொற்றால் இதுவரை பிரான்ஸ், ஹாங்காங், பிலிப்பீன்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் ஒவ்வொன்றிலும் ஒருவர் மாண்டுள்ளனர். அத்துடன் நேற்று தைவானில் கொரோனா கிருமித்தொற்று தொடர்பான முதல் மரணம் நிகழ்ந்தது. 60 வயதுகளில் உள்ள ஆடவர் மாண்டார்.
இதற்கிடையே 9,419 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
அவ்வரிசையில் சனிக்கிழமை மட்டும் 1,323 பேர் வீடு திரும்பியதாக தேசிய சுகாதார ஆணையம் கூறியது.
சீனாவின் ஹுபெய் மாநிலத்திலும் அதன் வூஹான் நகரிலும் கிட்டத்தட்ட 56 மில்லியன் மக்களை சீனா வீட்டுக்காவலில் தனிமைப்படுத்தியுள்ளது. இது சென்ற மாதம் 23ஆம் தேதிமுதல் நடப்புக்கு வந்தது. கிருமி தீவிரம் அடைவதற்கு 14 நாட்கள் ஆகும் என்று கூறப் படுகிறது. இந்நிலையில் கொரோனா கிருமி பரவாமல் இருக்க சீனா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் பலன் அளிக்கத் தொடங்கி இருப்பதாக தேசிய சுகாதார ஆணையத்தின் பேச்சாளர் மி ஃபெங் நேற்று தெரிவித்தார்.
கிருமித்தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டோரில் அபாய நிலையில் இருப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் திரு மி கூறினார். மிதமான அளவில் பாதிக்கப்படுவோருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் அபாய நிலையை எட்டுவதும் தவிர்க்கப்படுவதாக அவர் சுட்டினார். சீனாவின் மற்ற பகுதிகளில் பதிவாகும் கிருமித்தொற்று சம்பவங்கள் 12 நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வருவதாக கூறப்பட்டது.