அடிமேல் அடி வாங்கும் ஸி ஜின்பிங்
கொரோனா கிருமித்தொற்று தொடர்பில் சீனாவைப் பலரும் சாடி வர, ஆரம்பக்கட்டத்திலேயே அந்நாட்டின் அதிபர் ஸி ஜின்பிங் கிருமிப் பரவலுக்கு எதிராகப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
கிருமி பற்றி உலகிற்கு அறிவிப்பு செய்ததற்கு இரு வாரங்களுக்கு முன்பே, ஸிக்கு கிருமித்தொற்று பற்றி தெரிந்திருந்த விவகாரமும் வெளியாகியுள்ளது. ஜனவரி 7ஆம் தேதிநடந்த கட்சிக் கூட்டமொன்றில் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தி, தடுக்கும் முயற்சிகளுக்கு அவர் உத்தரவு இட்டிருந்ததாக நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அவரது உரை குறிப்பிடுகிறது.
திரு ஸி அண்மையில் பொதுமக்கள் கண்ணில்படாமல் விலகியிருப்பதாக நிலவும் கருத்தை மாற்றி, மீண்டும் அதிபர் பக்கம் மக்களை இழுப்பதற்காக திரு ஸியின் ஆலோசகர்கள் கூட்டத்தில் பேசப்பட்ட உரையை வெளியிட்டனர். ஆனால், இது பிரச்சினையைப் பெரிதாக்கியுள்ளது. ஜனவரி மாதத்தின் முன்பாதியிலேயே கூட்டம் நடத்தியதால் கிருமித்தொற்று விவகாரம் மோசமாகலாம் என்று அப்போதே அவர் அறிந்துள்ளார் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், ஜனவரி 7ஆம் தேதி நடந்த கூட்டத்தில் கொரோனா கிருமி விவகாரம் பேசப்பட்டதற்கான அறிகுறி இல்லை என சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ‘சின்ஹுவா’ செய்தி வெளியிட்டுள்ளது.