புதிதாக சமூகத்தில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று
சிங்கப்பூரில் இன்று (நவம்பர் 26) புதிதாக ஐந்து பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் ஒருவர் சமூகத்தொற்றுக்கு ஆளானவர் என்று தெரிவிக்கப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் இன்று யாருக்கும் புதிதாக தொற்று இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரில் 16 நாட்களில் முதன் முதலாக இன்றுதான் சமூகத் தொற்று ஏற்பட்டுள்ளது. கிருமி தொற்றிய மற்ற நால்வரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
அந்நால்வரும் வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. புதிதாக இன்று கிருமி தொற்றிய ஐவரையும் சேர்த்து இங்கு மொத்தம் 58,195 பேர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
புதன்கிழமையன்று புதிதாக ஏழு பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் அனைவருக்கும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்து இருந்தது. அந்த ஏழு பேரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.