கிருமிப் பரவல் தடுப்பில் தோல்வி: உலக சுகாதாரக் குழு அதிருப்தி
உலகளவிலான கொரோனா கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து உலக சுகாதார நிறுவனக் குழு அதிருப்தி தெரிவித்து உள்ளது. அரசாங்கங்களும் பொது சுகாதார அமைப்புகளும் எந்த அளவுக்கு மெதுவாகவும் பயனற்ற வகையிலும் செயல்பட்டன என்பதை அக்குழு தனது அறிக்கையில் சுட்டியுள்ளது.
ஆண்டாண்டு காலமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை உலக நாடுகள் கண்டுகொள்ளவில்லை என்று அது குறிப்பிட்டு உள்ளது.
கொள்ளைநோய் ஆயத்தநிலை மற்றும் சமாளிப்புக்கான சுயேச்சை குழு நேற்று தனது இடைக்கால அறிக்கையை வெளியிட்டது.
“அனைவரும் ஒன்றிணைந்து, ஒட்டுமொத்த திறன்களை வெளிப்படுத்தி மனிதகுல பாதுகாப்பு வலையை ஏற்படுத்தத் தவறி விட்டோம். பாதுகாப்புச் சாதனங்களைப் பெறுவதிலோ பரவலான தொடர்பு தடமறிதலிலோ அரசாங்கங்கள் திறனற்ற வகையில் செயல்பட்டன. இதுபோன்ற பல தோல்விகள் நிகழ்ந்து உள்ளன,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்புக்குப் பொறுப்பேற்று வழிநடத்த வேண்டியவர்கள் அவற்றைச் செய்யத் தவறிவிட்டதாகவும் குழு தனது மதிப்பீட்டில் கூறியுள்ளது.
கொரோனா கிருமிப் பரவல் விதம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட இந்த சுயேச்சைக் குழுவுக்கு முன்னாள் நியூசிலாந்து பிரதமர் திருவாட்டி ஹெலன் கிளார்க், முன்னாள் லைபீரிய அதிபர் திருவாட்டி எலன் ஜான்சன் சர்லீஃப் ஆகியோர் தலைமையேற்று உள்ளனர்.
நோய்ப் பரவல் தொடர்பான தனது அணுகுமுறைகளை உலகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அறிக்கை கேட்டுக்கொண்டு உள்ளது. ஒரு தோல்வி மற்றொரு தோல்விக்கு வழிவகுப்பதாகத் தெரிவித்து உள்ள அறிக்கை, ‘மெதுவான, சிக்கலான, உறுதியற்ற நிலையில்’ கொள்ளைநோய் விழிப்புமுறையில் தொடங்கி பல்லாண்டு கால தயார்நிலைத் திட்டங்கள் செயல்படுத்த இயலாமல் போனது வரை தோல்விகள் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளது. உலக அரசாங்கங்களின் சமாளிப்புத்தன்மை பொருத்தமற்றதாகவும் தடங்கல் நிறைந்ததாகவும் அறிக்கை மேலும் சுட்டியது.
பொது சுகாதார அதிகாரிகளிடம் தடுமாற்றம் காணப்பட்டதாகவும் தெரிவித்த குழு, அனைத்துலக சுகாதார அவசரநிலையை அறிவிக்க உலக சுகாதார நிறுவனக் குழு ஜனவரி 30 வரை ஏன் காத்திருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளது.
“பரவக்கூடிய கொள்ளைநோய் என்பது தவிர்க்க முடியாதது என்பதற்கான முன்னுரைப்புகள் காலம் காலமாக செய்துவந்த நிலையிலும் அவசரநிலைக்காக உலக சுகாதார நிறுவனத்தைத் தயார்ப்படுத்தும் நோக்கில் பல்வேறு உயர்மட்டக் குழுக்கள் பல காலமாக ஏற்படுத்தப்பட்டு வந்தபோதிலும் மாற்றங்கள் மெதுவாகத்தான் நிகழ்கின்றன. இருந்தபோதிலும் உலக சுகாதார நிறுவனத்தின் தடுமாற்றங்கள் மீண்டும் மீண்டும் தவறிழைக்கும் உலகத் தலைவர்களின் செயல்களை நியாயப்படுத்திவிடாது.
“சுகாதார அதிகாரிகள் மிகத்தெளிவாக சமிக்ஞை காட்டிய
போதிலும் அவை கண்டுகொள்ளப்படவில்லை. அறிகுறியற்ற மக்களிடம் இருந்து புதிய வகை கொரோனா கிரமி பரவும் என்பதற்கான ஆதாரங்களை முன்கூட்டியே கண்டறிவதில் பொது சுகாதார மேல்மட்ட அதிகாரிகள் மெத்தனம் காட்டினர்.” என்று அறிக்கை குறிப்பிட்டது.