குதிரையின் இறுதிச் சடங்கில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு; ஊரடங்கை மீறியதாக வழக்குப் பதிவு
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அன்றாடம் 30,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கிருத்தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால், ஜூன் 7ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்குகளில் கூட 20 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக பெலகாவி மாவட்டம், கோகாக் அருகேயுள்ள கடசித்தேஸ்வர் மடத்துக்கு சொந்தமான குதிரை ஒன்று நேற்று முன்தினம் இறந்தது. இறந்த குதிரையை தெய்வீக குதிரையாக மக்கள் கருதுவதால் அதன் இறுதிச் சடங்கில் கொவிட்-19 விதிமுறைகளை மீறி 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
குதிரையின் இறுதி ஊர்வலத்தைக் காட்டும் காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து பெலகாவி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லட்சுமண் நிம்பர்கி தலைமையிலான போலிசார், ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக கடசித் தேஸ்வர் மடத்தின் நிர்வாகிகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மரடிமாத், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளை மூடி போலிசார் அவற்றுக்கு சீல் வைத்தனர். குதிரையின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரையும் தனிமைப்படுத்தி, பரிசோதனை மேற்கொள்ளும் பணிகளையும் அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.