அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று 18% அதிகரிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொவிட்-19 பாதிப்பின் ஏழுநாள் சராசரி 18% கூடியிருப்பதாக அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மைய இயக்குநர் ரோஷெல் வெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அண்மைய ஏழுநாள் சராசரியின்படி, அங்கு நாளொன்றுக்கு 92,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் 6% கூடியுள்ளது. நாள்தோறும் சராசரியாக 5,600 பேர் கொவிட்-19 தொற்றுக்காக அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
“குளிர்காலம் நெருங்குவதால் விடுமுறைக்காலப் பயணங்களும் ஒன்றுகூடலும் அதிகமாக இருக்கும். அதன் காரணமாக கிருமிப் பரவலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொவிட்-19 தொற்றுக்கு எதிராக மக்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பை மேம்படுத்துவதே இப்போதைக்குச் செய்ய வேண்டிய முக்கியமான பணி,” என்று வெலன்ஸ்கி கூறியுள்ளார்.
நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையத்தின் அண்மைய தரவுகளின்படி, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஒருவரை கொரோனா தொற்ற ஆறு மடங்கும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட ஒன்பது மடங்கும், உயிரிழக்க 14 மடங்கும் அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் தகுதியுள்ள பெரியவர்களில் 47 மில்லியன் பேரும் பதின்ம வயதினரில் 12 மில்லியன் பேரும் இன்னும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று வெலன்ஸ்கி குறிப்பிட்டார்.
உலகில் கொரோனா தொற்றால் ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்காதான். இன்று செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அங்கு இதுவரை 47.9 மில்லியன் பேரை கொரோனா தொற்றிவிட்டது. அவர்களில் 772,414 பேர் மாண்டுவிட்டனர்.