இங்கிலாந்து செல்லும் முன்னதாக பிசிஆர் சோதனை தேவையில்லை; இனி தனிமைக்காப்பும் இல்லை
இங்கிலாந்துக்கு ஜனவரி 7 (வெள்ளிக்கிழமை) அன்று முதல் பயணம் செல்பவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால், அவர்கள் பயணத்துக்கு முன்னதாக பிசிஆர் சோதனைகளை மேற்கொள்ளத் தேவையில்லை.
மேலும் அவர்கள் இனி 10 நாள்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும் தேவையில்லை.
வெளிநாட்டிலிருந்து பயணம் செய்பவர்களுக்கான விதிமுறைகளை பிரிட்டிஷ் அரசாங்கம் புதன் (ஜனவரி 5) அன்று தளர்த்தியது.
ஆனால் இங்கிலாந்து சென்றவுடன் பயணிகள் விமான நிலையத்தில் பிசிஆர் சோதனை செய்துகொள்ள வேண்டும்.
மேலும், அங்கு சென்ற இரண்டு நாளில் பிசிஆர் சோதனை செய்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறையும் மாற்றப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை முதல், வந்திறங்கிய இரண்டு நாள்களுக்குப் பிறகு பயணிகள் விரைவு கிருமிப் பரிசோதனையை செய்துகொண்டால் போதும்.
அத்துடன், பயணிகள் பத்து நாள்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறையும் அகற்றப்பட்டது.
ஆனால் இந்தத் தளர்வுகள் அனைத்தும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டும் பொருந்தும்.
பிரிட்டனிலும் உலகின் பல நாடுகளிலும் ஓமிக்ரான்தான் பெரும்பாலும் பரவி வருவதால் பயணக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் பயன் அற்றுப் போய்விட்டதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் ஸ்காய் நியூஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.