பெங்களூரு: தும்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் தோற்றுப் போன தாத்தா தேவ கவுடாவுக்காக ஹாசன் தொகுதி எம்.பியாகத் தேர்வாகியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார். தும்கூரில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் தேவ கவுடா தோல்வியைத் தழுவினார்.
அவரது பேரனான பிரஜ்வல் ரேவண்ணா மட்டும் ஹாசன் தொகுதியில் வென்றார். இந்நிலையில் தாத்தா தேவ கவுடா மீண்டும் ஹாசனில் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்பதற்காக பிரஜ்வல் ரேவண்ணா தமது எம்.பி. பதவியைத் துறக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
ரேவண்ணாவின் வேட்புமனுவில் குளறுபடிகள் இருப்பதாகவும் அதனை விசாரித்த தேர்தல் ஆணையம் 5 பக்க விசாரணை அறிக்கையை அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. அதன் தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் ரேவண்ணாவின் பதவி பறிபோகும் என்பதால் இத்தகைய அறிக்கையை ரேவண்ணா வெளியிட்டிருக்கக்கூடும் என தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.