கேரளாவில் பெண்போல வேடமிட்டு ஆண்கள் பங்கேற்கும் கோவில் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டங்குளங்கர ஸ்ரீதேவி ஆலயத்தில் பல தலைமுறைகளாக சமய விளக்கு என்னும் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்தக் கோவிலில் முதலில் பெண்கள்தான் வழிபாடு செய்து வந்துள்ளனர். பின்பு அம்மனின் சக்தியை தெரிந்துகொண்டதால் ஆண்களும் பெண்கள்போல் வேடமிட்டு வழிபாடுகள் செய்யவும் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
ஆண்டுதோறும் நடக்கும் இந்த விழாவில் இந்தியா முழுவதும் இருந்து 40,000க்கும் மேற்பட்ட ஆண்கள் இந்தக் கோவிலுக்கு வந்து பெண்போல் வேடமணிந்து, சமய விளக்கு என்னும் சடங்கை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஆடை அலங்காரம் செய்வதற்காகவே ஏராளமான ஒப்பனைக் கலைஞர்களும் காணப்பட்டனர்.
வேண்டுதலுக்காக வருபவர்கள், வேண்டுதல் நிறைவேறிய பின் நேர்த்திக்கடன் செலுத்த வருபவர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் வருடந்தோறும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர்.
தங்களுடன் வரும் மனைவிகளே தங்களைப் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு இவர்களின் அலங்காரம் இருக்கிறதாம். இதைப் பார்க்கும் பெண்களுக்கு ஆண்கள்மீது மரியாதை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
பலரும் இவர்களுடன் நின்று புகைப்படங்கள் எடுத்துச் சென்றனர்.
நன்றி: புதிய தலைமுறை