புதுடெல்லி: இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் தொடர்பான விதிமீறல் புகார்களும் வந்தவண்ணம் உள்ளன.
தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களுக்கு விரைந்து தீர்வுகாணும் வகையில், இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த 2018ஆம் ஆண்டு ‘சிவிஜில்’ எனும் செயலியை உருவாக்கியது.
அச்செயலி வழியாகப் பெறப்படும் புகார் மீது அடுத்த 100 நிமிடங்களுக்குள் தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் விரும்பினால் தங்கள் பெயரைத் தவிர்க்கலாம். மேலும், புகார் அளிப்பவர் தொடர்பான விவரங்களும் ரகசியமாக வைக்கப்படும்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலைவரை அச்செயலி மூலம் கிட்டத்தட்ட 79,000 புகார்கள் அளிக்கப்பட்டன. அவற்றில் 99 விழுக்காட்டுப் புகார்களுக்குத் தீர்வுகாணப்பட்டுவிட்டன; 89 விழுக்காட்டுப் புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் தீர்வுகாணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், கடந்த வியாழக்கிழமை வரையிலும் ‘சிவிஜில்’ வாயிலாக 1,300க்கும் அதிகமான புகார்கள் வந்தன.
“பதிவு செய்யப்பட்ட புகார்களில் 73 விழுக்காடு, அதாவது 58,000 புகார்கள், சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பதாகைகளுக்கு எதிரானவை. வாக்குக்குப் பணம், பரிசுப்பொருள்கள் மற்றும் மதுபானம் வழங்கியதாக 1,400 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சொத்துகளைச் சேதப்படுத்தியதாக 2,454 புகார்கள் வந்துள்ளன. துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டியதாக பெறப்பட்ட 535 புகார்களில், 529 புகார்களுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பரப்புரையில் ஈடுபட்டதாக 1,000 புகார்கள் வந்துள்ளன,” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசியல்வாதிகள், வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்களில் ஈடுபடுவதை அறிய நேர்ந்தால், அதனை புகைப்படம் அல்லது காணொளி எடுத்து, உரிய ஆதாரத்துடன் ‘சிவிஜில்’ செயலியில் பதிவுசெய்து, புகார் தெரிவிக்கலாம்.
ஆனால், அச்செயலி இந்தி, ஆங்கிலம் என இரு மொழிகளில் மட்டுமே உள்ளது. இம்மொழிகள் தெரியாதவர்கள் அச்செயலியை பயன்படுத்த இயலாத நிலையே உள்ளது. அதனால், தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளையும் அச்செயலியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.