கோல்கத்தா: இந்தியாவின் முதலாவது நீரடி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (மார்ச் 6) கோல்கத்தாவில் தொடங்கி வைக்கவுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கோல்கத்தா மெட்ரோ ரயில் விரிவுபடுத்தப்படுகிறது. ஹௌரா மைதான் முதல் எஸ்பிளனாட் வரையிலான அந்த நீட்டிப்பில், ஆற்றுக்கடியில் கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதையும் அடங்கும்.
இந்தக் கட்டுமானம், இந்தியாவின் தொழில்நுட்ப வல்லமையைப் பறைசாற்றுவதோடு மட்டுமின்றி, கோல்கத்தாவின் சுறுசுறுப்பான இரண்டு பகுதிகளை இணைக்கும் உத்திபூர்வ முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 16 மீட்டர் ஆழத்தில் அச்சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளதாக கோல்கத்தா மெட்ரோ ரயில் சேவையின் பொது மேலாளர் உதய் குமார் ரெட்டி குறிப்பிட்டார்.
ஹௌரா மைதான் - எஸ்பிளனாட் நிலையங்களுக்கு இடையே நாள்தோறும் 700,000 பேர் பயணம் செய்வர் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.
ஹூக்ளி ஆற்றின்கீழ் அச்சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. அந்த ஆற்றின் கிழக்குக் கரையில் கோல்கத்தா நகரும் மேற்குக் கரையில் ஹௌரா நகரும் அமைந்துள்ளன.
ஹூக்ளி ஆற்றின்கீழ் அமைந்துள்ள அந்த 520 மீட்டர் நீளச் சுரங்கப்பாதையை மெட்ரோ ரயில் 45 நொடிகளில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹௌராவில் அமைந்துள்ள ஈஸ்ட்-வெஸ்ட் மெட்ரோ நிலையம் இந்தியாவின் ஆழமான மெட்ரோ நிலையம் என்ற பெயருடன், இந்தியாவின் மிகப் பெரிய மெட்ரோ நிலையம் என்ற பெருமையையும் பெறும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.