புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக விமர்சனம் செய்த சமூக ஆர்வலர் ஒருவர் நடத்தி வரும் லாபநோக்கற்ற அறக்கட்டளைக்கு வெளிநாட்டி லிருந்து நன்கொடை பெறும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த அறக்கட்டளை வெளிநாட்டு நிதியை தவறுதலாகப் பயன்படுத்தியதாகக் கூறி இந்த உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டீஸ்டா செடல்வத் எனும் சமூக ஆர்வலரால் நடத்தப்படும் சப்ராங் அறக்கட்டளை பெற்ற வெளிநாட்டு நிதியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக உள்துறை அமைச்சு நேற்று முன்தினம் குற்றம் சாட்டியது.
உள்நாட்டு, வெளிநாட்டு நிதிகளை அந்த அறக்கட்டளை சட்ட விரோதமாக ஒன்றிணைத்ததாகவும் அதில் சொல்லப்பட்டது. 2002ஆம் ஆண்டில் பிரதமர் மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது சமயம் சார்ந்த கலவரத்தில் படுகொலைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் 24 இந்துக்கள் மீதான வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இது குறித்து விமர்சித்து வந்ததற்காக தாம் தொடர்ந்து குறிவைக்கப்படுவதாக டீஸ்டா செடல்வத், 54, குறிப்பிட்டுள்ளார். உள்துறை அமைச்சின் ஆணையை எதிர்கொள்ள தேவை யான சட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆராயப்படும் என அந்த அறக்கட்டளையின் செயலாளர் கூறியுள்ளார்.
வெளிநாட்டு நிதியால் ஆதரிக்கப்பட்டு வந்த அரசுசாரா அறக்கட்டளைகளான கிரீன்பீஸ், ஃபோர்ட் அறக்கட்டளைஆகியவற்றின் மீது மோடி அரசு கடும் நடவடிக்கை எடுத்ததற்கு எதிரான விமர்சனங்கள் ஏற்கெனவே வெளியாகியிருந்தன. வெளிநாட்டு நிதி பெறுவதை முறைப்படுத்தும் சட்டமான 'எஃப்சிஆர்ஏ' அனுமதிக்காத நடவடிக்கைகளை இந்த மூன்று அறக்கட்டளைகளும் மேற்கொண்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீஸ்டா செடல்வத் நடத்தி வரும் சப்ராங் அறக்கட்டளை வெளிநாட்டு நிதி பெறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. படம்: இணையம்