பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே நேற்று விடியற்காலை நிகழ்ந்த சாலை விபத்தில் ஐந்து பேர் மாண்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அந்த ஐவரும் லூதியானாவில் இருந்து காரில் சென்றனர். டேஹ்லோன் எனும் கிராமத்திற்கு அருகே சென்ற போது திடீரென்று தெருநாய் ஒன்று சாலையின் குறுக்கே ஓடியது. அதன் மீது மோதிவிடாமல் இருக்க காரை ஓரமாகத் திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதிய பின்னர் பேருந்துடன் நேருக்கு நேராக மோதியது. மோதிய வேகத்தில் காரில் இருந்த ஐவரும் அந்த இடத்திலேயே நசுங்கி மாண்டனர்.
லூதியானா காந்தி நகரைச் சேர்ந்த பிரவீன் குமார் (43), அவரது மனைவி ஜோதி (40), மகள்கள் ரியா (16), ஷிபு (14) மற்றும் மகன் கிருஷ்ணா (10) ஆகியோர் மாண்டவர்கள் என அடையாளம் காணப் பட்டது. சங்க்ரூரில் தனது சகோதரி வீட்டுக்குச் சென்றுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. நாயைக் காப்பாற்ற முயன்று ஐந்து உயிர்கள் பறிபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.2016-10-20 06:00:00 +0800