கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர். பிர்பும் மாவட்டத்தில் உள்ள தர்பார்பூர் என்ற கிராமத்தில் மணல் கொள்ளையில் ஈடுபடும் இரு கும்பல்களுக்கு இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. அப்போது இரு கும்பல்களும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கிக் கொண்டன. இதனால் பெரும்பாலான கிராம மக்கள் ஊரை விட்டு ஓட்டம்பிடித்தனர்.
ஒரு பள்ளியின் உள்ளே மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டும் கதவை தாழிட்டுக் கொண்டு அச்சத்தில் பலமணி நேரம் காத்திருந் தனர். இந்நிலையில், ஒரு கும்பலுக்கு வழங்குவதற்காக அருகில் உள்ள டர்கா என்ற கிராமத்தில் சுமார் 15 பேர் நாட்டு வெடிகுண்டுகளை அவசரகதியில் தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.