கொல்கத்தாவில் உள்ள பென்டின்க் சாலையில் ஓரிடத்தில் கொட்டிய ‘பணமழை’யைக் கண்டு ஆனந்தத்தில் திளைத்த அந்தப் பகுதி மக்கள், தங்களால் இயன்றவரை பணத்தை எடுத்துக்கொண்டு சென்றனர்.
கொல்கத்தாவில் உள்ள ‘ஹாக் மெர்கன்டைல்’ எனும் ஏற்றுமதி நிறுவனத்தில் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நேற்று (நவம்பர் 20) பிற்பகலில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
ஆறாவது மாடியில் இருக்கும் அந்த நிறுவனத்தின் சன்னல் வழியாக அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ2,000 நோட்டுகளை வெளியே வீசினார்.
ரூபாய் நோட்டுகள் பறந்ததால் ஏற்பட்ட ‘பணமழை’ மக்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்தக் காட்சிகளை சிலர் கைபேசியில் படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
அதிகாரிகளின் சோதனை குறித்து விசாரித்தபோது, கூடுதல் இயக்குனர் தீபாங்கர் அரோன் தலைமையில் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதாகவும், அதில் பல கள்ளக்கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும், ஊழியர்கள் வீசியெறிந்த பணம் சுமார் ரூ.4 லட்சம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity