கோல்கத்தா: கோல்கத்தா மேம்பாலத்தைக் கட்டி வந்த 'ஐவிஆர்சிஎல்' என்ற கட்டுமான நிறுவனம் இந்த விபத்தை ஆண்டவனின் செயல் என்று கூறியுள்ள நிலையில், இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஐவரை கைது செய்த போலிசார் அவர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். நேற்று முன்தினம் பிற்பகல் ஊழியர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் பல தொழிலாளர்கள் சிக்கினர்.
இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினரும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் இதுவரை 25 பேர் உயிரிழந்ததாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று தெரிவித்திருந்தார். இதில் மேலும், 85 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.