கேரளாவில் புதிதாக 6 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.
கர்நாடகாவில் மேலும் மூவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இந்தியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56ஆக தற்போது உயர்ந்துள்ளது.
நேற்று மலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47ஆக இருந்தது.
கடந்த மாதம் 3 பேருக்கு கேரளாவில் கிருமித்தொற்று ஏற்பட்ட மூவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று அங்கு மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்களில் மூன்று வயது குழந்தையும் ஒன்று.
கிருமித்தொற்று கண்ட மற்றவர்கள் பேர் ஜம்மு, டெல்லி, உத்தரப் பிரதேசம், புனே, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்டை மாநிலங்களில் கிருமித்தொற்று அதிகரித்து வரும் வேளையில் தமிழகத்தில் கொவிட்-19 அச்சம் வெகுவாக அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து ஊர் திரும்பிய தமிழகத் தென் மாவட்டத்தினர், 199 பேர், ‘கொரோனா’ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில், 48, திண்டுக்கல் - நான்கு, தேனி - 29, ராமநாதபுரம் - ஐந்து, சிவகங்கை - ஐந்து, திருநெல்வேலி - இரண்டு, கன்னியாகுமரி - ஐந்து, துாத்துக்குடி - 50, தென்காசி - 51 பேர் என, தென் மாவட்டங்களில், 199 பேர், ‘கொரோனா’ கண்காணிப்பில் உள்ளனர்.
இந்நிலையில், ஈரானில் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்தது. அவர்களை மீட்க இந்திய விமானப்படை விமானம் நேற்று இரவு புறப்பட்டுச் சென்றது.
முதற்கட்டமாக இன்று காலை 58 இந்தியர்களுடன் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது.
விமானம் 58 பேருடன் புறப்பட்டபோது எடுத்த புகைப்படங்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் தகவல் தெரிவித்திருந்தார்.
அங்கிருந்து 529 இந்தியர்களின் நாசி திரவத்தை பரிசோதனைக்காக எடுத்து வந்தனர் அதிகாரிகள். பரிசோதனைக்குப் பிறகு அவர்களில் யாருக்காவது கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற விவரம் தெரியவரும்.
கடந்த சில நாட்களாக கொரோனா கிருமித்தொற்று அதிகரித்து வரும் இந்தியாவில் சுமார் 2,000 இந்தியர்கள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#கொவிட்-19 #கொரோனா #இந்தியா #தமிழ் முரசு