புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக நடைமுறைக்கு வந்துள்ள 21 நாள் ஊரடங்கு ஏப்ரல் 14ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
அந்த உத்தரவு மேலும் நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது.
இந்த நிலையில், ஏப்ரல் 14க்கு பிந்தைய காலகட்டத்தில் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்தவும் பொருளியலை வளர்ச்சிப் பாதையில் திருப்பிவிடவும் மக்களுக்கு கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் சிரமங்களையும் குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்காக பிரதமர் அலுவலகம் வெவ்வேறான 10 உயர்நிலைக் குழுக்களை அமைத்துள்ளது.
அந்தக் குழுக்கள், பிரதமரின் பிரதான செயலாளரான பி. கே. மிஸ்ரா தலைமையில் அவருடைய வழிகாட்டலின் பேரில் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தும் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றன.
இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு முடிவுற்றதும் இமாலயப் பிரச்சினைகள் தலைதூக்கும் என்றும் மத்திய, மாநில அரசாங்கங்கள் பெரும் பெரும் சவால்களைச் சமாளிக்க வேண்டி இருக்கும் என்றும் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில், இந்த 10 குழுக்களும் தங்கள் தங்களுக்குரிய துறைகளில் முழு கவனம் செலுத்தி கூடுமான வரையில் வழமை நிலையை நிலைநாட்ட அயராது பாடுபடும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
ஏழைகளுக்கான நல்வாழ்வுத் திட்டங்கள், சுகாதாரப் பராமரிப்பில் இடம்பெற வேண்டிய முயற்சிகள், பொருளியலை உசுப்பிவிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள், உள்ளிட்ட பலவற்றையும் முன்னெடுக்க குழுக்கள் அமைக்கப்பட்ட உடனேயே சுமார் 20 துறைச் செயலாளர்களும் இதர 40 அதிகாரிகளும் பணியில் இறங்கிவிட்டார்கள் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒவ்வொரு குழுவிலும் ஆறு உறுப்பினர்கள் இருப்பார்கள். பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியும் குழுவில் இருப்பார்.
அமைச்சரவைச் செயலாளரும் இடம்பெற்று இருப்பார்,
இதனால் முழு அளவில் ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் இருக்கும் என்றும் ஆகையால் அந்த 10 குழுக்களும் பரிந்துரைக்கும் நடவடிக்கைகள் உடனுக்குடன் நடைமுறைக்கு வர வசதிகள் இருக்கும் என்றும் தகவல் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.