தெற்கு ஆசியாவில் கொரோனா கிருமித்தொற்று எண்ணிக்கை 6,000ஐ நெருங்கியுள்ள நிலையில், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு இம்மாதம் 14ஆம் தேதிக்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பல இடங்களில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“ஊரடங்கு விதிமுறைகளை மக்கள் கடுமையாகப் பின்பற்றாவிடில், கிருமித்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும். ஊரடங்கை நீட்டிப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போகும்,” என மகாராஷ்டிர மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் கூறினார்.
“மும்பை, மகாராஷ்டிராவின் நகர்ப் புறங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம்,” என்றார் அவர்.
மூன்று வாரங்களுக்குத் திட்டமிடப்பட்ட ஊரடங்கு உத்தரவு படிப்படியாக மீட்டுக்கொள்ளப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.
தெற்கு ஆசியாவிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. அங்கு இன்றைய (ஏப்ரல் 4) நிலவரப்படி 2,902 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் மட்டும் 516 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது; 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 411 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது; அங்கு இரண்டாவது நபர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்பட்டது.
கொரோனா கிருமித்தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என மூத்த அதிகாரிகள் மூவர் தெரிவித்தனர்.
சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி போன்ற பெரு நகரங்களில் மெட்ரோ போன்ற பொதுப்போக்குவரத்துச் சேவைகள் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கட்டம் கட்டமாகவே செயல்படுத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
உலக மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டிருக்கும் தெற்கு ஆசியாவில் கடந்த வாரம் கிருமித்தொற்று சம்பவங்கள் இரட்டிப்பாகின; பொதுச் சுகாதாரச் சேவைகள் அங்கு மேலும் வலுவிழந்துள்ளன.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பாகிஸ்தான், பங்ளாதேஷ் போன்ற நாடுகளிலும், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம் சிறுபான்மையினரைக் கொண்டுள்ள இந்தியாவிலும் பழமைவாத சமயக் குழுக்களைச் சமாதானப்படுத்தி பாதுகாப்பான இடைவெளி நடைமுறையை நடைமுறைப்படுத்துவது மிகுந்த சிரமமானதாகவே உள்ளது என்று கவனிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.