இளைஞர் ஒருவர் ஐதராபாத்திலிருந்து சுமார் 700 கி.மீ. தூரத்தை நடந்தே கடந்து சொந்த ஊருக்கு சென்று சேர்ந்திருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அருகே கொள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். 26 வயதான இவர் இணையம் வழி விற்பனை நிறுவனம் ஒன்றில் சந்தைப்படுத்தல் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இந்தியா முழுவதும் மார்ச் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அங்கேயே முடங்கிக் கிடந்தார். பின்னர் கடந்த 14ஆம் தேதி நடந்தே சொந்த ஊருக்கு செல்லலாம் என முடிவெடுத்தார்.
இத்தகவலை முன்னாள் அமைச்சரான பொன்முடியிடம் அவர் தொலைபேசி வழியாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, ஐதராபாத்திலிருந்து கர்நூல், கடப்பா, சித்தூர், வேலூர் வழியாக சுமார் 700 கி.மீ. நடந்தே ஏப்ரல் 28ஆம் தேதி இரவு திருவண்ணாமலை வந்தடைந்தார். அங்குள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று கரோனா பரிசோதனை எடுத்துக்கொண்டு அடுத்த நாள் காலை மீண்டும் திருக்கோவிலூரை நோக்கி நடந்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட எல்லையான வெறையூரை நெருங்கும்போது உறவினர் மணிகண்டனை தொடர்புகொண்டு விவரத்தைக் கூறியுள்ளார். இதையறிந்த மணிகண்டன் தன் இருசக்கர வாகனத்தில் சதீஷை அழைத்து வர வெறையூர் சென்றார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் இருவரையும் கைது செய்து இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
இத்தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி பத்திரிகையாளர்கள் மூலம் திருவண்ணாமலை எஸ்.பி.யிடம் விவரத்தைத் தெரிவிக்கச் சொல்லியுள்ளார்.
பின்னர், எஸ்.பி.யின் உத்தரவின் பேரில் சதீஷ் மற்றும் மணிகண்டனை விடுவித்து இருசக்கர வாகனத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
ஒரு வழியாக நேற்று முன்தினம் அவர் சொந்த ஊருக்கு சென்று சேர்ந்தார்.